பக்கம் எண் :

காமதேனு - வாசக ஞானம்

வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம்முதலிய லௌகிக விவகாரங்கள எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

பொதுவாகக் கூறுமிடத்தே. மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம ஸத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்,

''வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே''

என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பொருள் "வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்" என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்''

என்ற குறளால் உணர்த்துகிறார்.

இதன் பொருள் 'வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்' என்பது