பக்கம் எண் :

காமதேனு - வாசக ஞானம்

திருஷ்டாந்தமாக, 'ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்மகுணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக்கருதுதல் பிழை' என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்று கேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய "ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.

'விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம் சித்தாந்தம்'என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.

'எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்"என்று கண்ணன் கீதையால்உணர்த்திய உண்மையையும், "எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன்" என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.

''இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ     
வன்சொல் வழங்குவது''

என்ற குறளின்படி, ''இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவதுகண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள வழங்குவது மடமை'' என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.

'மரணம் பாவத்தின் கூலி" என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் "எவரையும் காணவில்லை. ''நாமெல்லோரும் பாவிகள்'' என்பதைப் பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.

இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங்கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.