பக்கம் எண் :

காமதேனு - வாசக ஞானம்

கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.

இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து. தற்கால அஸௌகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக்கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப்போய்விட்டது.

வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள்,உலகத்தீரே! கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.

ஆண் பெண் ஸமத்வமே தர்மமென்று தெரிகிறதா?அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா?  நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா?  நல்லது, வாருங்கள். கோடிக்கணக்காக, ஸமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.

''அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும'' என்று தெரிந்தோமோ?  நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம்.