பக்கம் எண் :

ஓம் சக்தி - புராணங்கள்

எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய  தெய்வத் தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதிக தூஷணைகள் நிரம்பிக் கக்ஷிச் சண்டைகளை மிகுதியாகச்சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ஙனம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம்சிதைவு பெற்றுப் போயிற்று. ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில்வேதத்துக்கு நாம மாத்திரையாக கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்துச் சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத்தலைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே, காரணமாக இருந்ததென்று தவறாகக்கருதி வைதிக ஞானிகளே சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும் உபநிஷத்தை ஞானகாண்டமென்றும்சொல்லலாயினர்.

வஸிஷ்டர் முதலியவர்களைக் 'கர்மி'களென்றும்பிற்காலத்துப் பண்டாரங்களை 'ஞானி' களென்றும் ஜனங்கள்மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிகஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்யபதவிகொண்டு வாழவேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:-

(1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்-இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்கவேண்டும்.

(2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றைவிளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வசரித்திரம் இவற்றைவிளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு,இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதனவென்று கழித்துவிட வேண்டும்.

(3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும்ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும்புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே,பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!