சுர - சுரை = 1. குழிந்த இடம். “பாத்திரத் தகன்சுரைப் பெய்தவாருயிர் மருந்து’’ (மணிமே. 11 117). 2. உட்டுளை (பிங்.). 3. மூங்கிற் குழாய். “அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர்’’ (அகம். 113). 4. திரிக் குழாய். “சொரிசுரை கவருநெய்’’ (பதிற். 47). 5. திருகாணியைச் செலுத்துஞ் சிறு குழாய். 6. மூட்டுவாய். “சுரையம்பு மூழ்க. ’’ (கலித். 6). 7. பூண். “செறிசுரை வெள்வேல்’’ (அகம். 216). 8. தோண்டும் கூரான பாரைவகை. “உளிவாய்ச் சுரையின் மிளிர மண்டி’’ (பெரும்பாண். 92). 9. நெற்றானபின் உட்டுளையுள்ள காய்வகை. “சுரைவித்துப் போலுந்தம் பல்’’ (நாலடி. 315). ம. சுர, க. சொரெ. 10. நுண்ணிய துளையினின்று சுரக்கை. “கடுஞ்சுரை நல்லான்’’ (குறுந். 132). க. சொரெ. 11. மான்மரை மறி ஆன் முதலியவற்றின் பான்மடி. “வருடை மான்மறி சுரைபொழிதீம்பால்’’ (குறுந். 187). 12. கறக்கும் ஆ (திவா.). “சுரைமலி யமிர்தத் தீம்பால்’’ (சூளா. தூது. 90) சுள் - சுளி - (சுகி) - சுகிர். சுகிர்தல் = 1. கிழித்தல். “பல்லினாற் சுகிர்ந்த நாரின்’’ (சீவக. 438). 2. மயிர், நார் முதலியவற்றை வகிர்தல். சுகிர்= உட்டுளை (சூடா.). சுர் - (சூர்) - சூறு = எருவாய் (anus). சூறு - சூற்று - சூத்து = 1. எருவாய் (மலவாயில்). 2. புட்டம். “சூத்தி லடித்தானாம், பல்லுப் போச்சாம்’’ (பழமொழி). ம. சூத்து, வ. சுத்து (c), சூத்து (c), சுத்தீ (c). வடமொழியில் இதற்கு மூலமில்லை. தமிழில் மூலம் தெளிவாகவுள்ளது. சூறல் (சூலுதல்) = தோண்டுதல். சூறு = துளை, எருவாயில். இங்ஙன மிருந்தும், சூத்து என்னும் தென்சொற்குச் சுத்தீ என்னும் வடசொல்லை மூலமென்று தலைகீழாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலி (Lexicon) காட்டியிருப்பது எத்துணைக் குறும்புச் செய்தியாம்! சூத்தழகி = குரங்குச் சூத்து மாம்பழம். சூத்தாங் கரடு = எருவாயின் தடிப்பு. சூத்தாட்டி = வலியான் என்னும் ஒருவகைக் குருவி. சூத்தாம்பட்டை = புட்டம். சூத்தெரிச்சல் = எருவாய் காந்துதல். இடக்கர் வினைச் சொற்களும் வழக்குகளும் இங்கு விடப்பட்டுள்ளன. இவ்வழக்குகளுள் ஒன்றேனும் வடமொழியில் இல்லை. |