பக்கம் எண் :

161

தேன் - தேம் = 1. தேன். “தேம்படு நல்வரை நாட’’ (நாலடி. 239). 2. இனிமை. “தேம்பூங் கட்டி’’ (குறுந். 196). தேங்குழல் (உ. வ.) 3. கள் (சூடா.). 4. இனிய மணம். “தேங்கமழ் கோதை’’ (பு. வெ. 12 7). 5. இனியஒலி. “தேம்பிழி மகர யாழின்’’ (கம்பரா. நாட்டுப். 4). 6. ஒளிமண வூற்றினிமை. “தேங்கொள் சுண்ணம்’’ (சீவக. 12). 7. தேன்வண்டு. “தேம்பாய் கூந்தல்’’ (குறுந். 116). 8. தேன்போன்ற எண்ணெய். “தேங்கலந்து மணிநிறங்கொண்ட மாயிருங் குஞ்சியின்’’ (குறிஞ்சிப். 111). 9. வண்டிற்குத் தேன் போன்ற மணமுள்ள யானைமதம். “தேம்படு கவுள.... யானை’’ (முல்லைப். 31).

தேம் - தீம் = 1. இனிமை. 2. இனிய, இன்சுவையுள்ள. “தீந்தேன்’’ (குறுந். 179), “தீங்கனி’’ (குறுந். 277), “தீம்பால்’’ (குறுந். 27), “தீம்புளி நெல்லி’’ (குறுந். 317), “தீம்புனல்’’ (149). 3. ஒலியால் இனிய. “தீம்பாலை’’ (சிலப். 7 48). 4. ஒலியாலும் சொல்லாலும் பொருளாலும் செய்யுளாலும் இலக்கண விலக்கியத்தாலும் இனிய. “ஒண்டீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’’ (திருக்கோ. 20).

தீம் - தீவு = இனிமை. தீவுதல் = இனித்தல்.

தீவு - தீவிய = 1. இனிய. 2. இனியவை. “செவ்விய தீவிய சொல்லி’’ (கலித். 19).

தீம்தீம் - தீந்தீம் - தீந்தீ - திந்தி - தித்தி.

ஒ.நோ : சீச்சீ - சிச்சீ - சிச்சி. தம்தம் - தந்தம் - தத்தம்.

தீந்தி, திந்தி என்னும் இணைப் பண்புகள் இறந்துபட்டன. முதலிரு கழக இலக்கியமும் குமரிநாட்டு உலக வழக்கும் இன்றின்மையால், இவற்றிற்கு எடுத்துக்காட்டில்லை.

தித்தித்தல் = இனித்தல். “திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’’ (திவ். நாய்ச். 7:1).

தித்தி = 1. தித்திப்பு (W.). 2. பேரீந்து (W.). 3. இன்பம்.

இது செ. ப. க. க. த. அகரமுதலி குறிக்கின்றவாறு, ஒலிக்குறிப்புச் சொல்லன்று.

தித்திப்பு = 1. இனிப்பு. “தித்திக்குமோர் தித்திப்பெலாங்கூட்டி யுண்டாலும்’’ (அருட்பா, VI, நடராஜ. 10). 2. இனிப்புள்ள பண்டம்.

தேன் - தேனி. தேனித்தல் = 1. இனித்தல். 2. இன்புறுதல், மகிழ்தல். “கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ’’ (திவ். பெரியாழ். 4:6:1)