ம. தெளியுக, க. திளி. தெளிவு = 1. ஒளிர்வு, விளக்கம். 2. துலக்கம். 3. பொருள் வெளிப்படையாகத் தோன்றும் செய்யுட்குணம். “தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே’’ (தண்டி. 16). 4. உடற் செழிம்பு. 5. தெளிந்த சாறு. “கரும்பின் தெளிவே’’ (திருவாச. 5 55). 6. தெளிந்த பனஞ்சாறு, பதநீர் (கொங். வ.). 7. கஞ்சித் தெளிவு. 8. தெள்ளறிவு (பிங்.). “நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவாமே’’ (தேவா. 1114 6). 9. நனவு (திவா.). 10. மனத்தெளிவு (திவா.). 11. ஆராய்ந்து கொண்ட முடிபு. “தெளிவிலதனைத் தொடங்கார்’’ (குறள். 464). 12. நம்பிக்கை. “தெளிவிலார் நட்பிற்பகை நன்று’’ (நாலடி. 219). 13. மனவமைதி. 14. நற்காட்சி. “அறத்துளார்க் கெலாமினி யராதலது தெளிவே’’ (சீவக. 2816). 15. தூக்க நீக்கம். தூக்கந் தெளிந்துவிட்டது (உ. வ.). 16. மெய்ப்பு. தக்க தெளிவில்லாததால் வழக்குத் தள்ளுபடியாயிற்று. (நாஞ்.). ம. தெளிவு, க. திளி. தெளியக் கடைந்தவன் = ஏமாறாதவன், எவரையும் எளிதாய் நம்பாதவன். (உ. வ.). தெளிச்சல் = உடற்செழிம்பு. வேலை முடிந்தபின் அவனுக்கு உடம்பில் தெளிச்சல் காணுகிறது. (நாஞ்.). தெளிஞன் = அறிஞன் (W.). தெளி - தெளிர். தெளிர்தல் = 1. ஒளிபெறுதல். “வண்ணந் தெளிர’’ (பரிபா. 10 ;95). தெளிர்த்தல் = 1. தெளிவா யொலித்தல். “இலங்குவளை தெளிர்ப்பவலவ னாட்டி’’ (ஐங். 197.). 2. செழித்தல். “வறத்த ஞாலந் தெளிர்ப்ப வீசி’’ (ஐங். 452). 3. மகிழ்ச்சியுறுதல். “சேயிழை தெளிர்ப்பக் கவைஇ’’ (அகம். 51). தெள் - தெறு - தெற்று = தேற்றம் (W.). தெற்றென்னுதல் = தெளிதல். “தெற்றென்க மன்னவன் கண். (குறள். 581). தெற்றென = தெளிவாக. “யானுந் தெற்றென வுணரேன்’’ (அகம். 48). தெற்றெனவு = 1. தெளிவு. “தெற்றென வில்லார் தொழில்’’ (திரிகடு. 54). 2. வெட்கமின்மை (தவறான தெளிவு). “சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்’’ (திவ். இயற். பெரியதிரு. 141). |