பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

தெற்று - தெற்றல் = அறிவில் தெள்ளியவன். “இணைமரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல்’’ (திவ். பெரியதி. 11: 4:9).

தெறு - தேறு. தேறுதல் = (செ. குன்றிய வி.) - 1. நீர் தெளிதல். “தேறுநீர் சடைக்கரந்து’’ (கலித். கட. வாழ்.). 2. மயக்கந் தெளிதல். 3. மனந்தெளிதல், அறிவுதெளிதல். “உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்’’ (குறள். 589). 4. செழிம்புறுதல். நோய் நீங்கி உடல்தேறி வருகிறான். (உ. வ.). 5. ஆறுதலடைதல். 6. திடங்கொள்ளுதல். 7. தேர்ச்சியடைதல். 8. தேர்வில் வெற்றி பெறுதல். 9. முதிர்தல். தேறின காய். (உ. வ.). 10. உருப்படியாதல். எல்லாம் புடைத் தெடுத்தால் ஒருபடி தேறும். (உ. வ.). 11. கூடுதல். “ஒரு காசு பேணின் இரு காசு தேறும்’’ (பழமொழி).

செ. குன்றாவி. - 1. நம்புதல். “தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வி தன்றால்’’ (கம்பரா. வாலிவ. 33). 2. துணிதல். “தேறுவ தரிது’’ (கம்பரா. மாயா சீதை. 89). 3. சேருதல். “அழிவின்கட் டேறான் பகாஅன் விடல்’’ (குறள். 876). தெ. தேரு, க. தேரு.

தேறு = 1. தெளிவு. 2. தேற்றம் (சூடா.). 3. தேற்றாங்கொட்டை. “தேறுபடு சின்னீர் போல’’ (மணிமே. 23 :142).

கலங்கிய நீரைத் தெளியச் செய்வதால், இல்லம் (தேற்றாங் கொட்டை) தேறு எனப்பட்டது.

இல்லின் - படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக் கலுழி நீக்குங் கம்மியர்போல’’ (பெருங். 35 :215 - 17).

இல் = இல்லம்.

“கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற்றெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து’’ (கலித். 142, சுரிதகம்).

இதன் நச். உரை - “தேய்க்குங் காலத்தே சிதைக்கின்ற தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறு போல ....... பெற்றாள்.’’

தேறுகடை = தீர்மானம். அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான். (உ. வ.) (W.).

தேறுசூடு = ஆடு மாடுகள் தேறுவதற்கு இடுஞ் சூடு.

தேறுதலை = 1. ஊக்குவிப்பு. 2. ஆறுதல்.

தேறுமுகம் = பற்றுக்கோடு. “தேறுமுக மின்றித் திரிந்தேமை யாள’’ (கந்தபு. தேவர்கள் போற். 4).