பக்கம் எண் :

117

பள்ளிமாடம் = அரசர் துயிலும் மாடம். “பள்ளிமாட மண்டபம்” (சீவக. 146). பள்ளியந் துலா = துயிலும் பல்லக்கு. “பள்ளி யந்துலா வேறுவர்” (மதுரைப் பதிற். 19). பள்ளியோடம் = படுக்கையமைந்த படகு.

பகலெல்லாம் அங்குமிங்கும் அலைந்து திரிந்து உணவு தேடிய முதற்கால அநாகரிக மாந்தனுக்குப் போன்றே, இக்கால நாகரிக மாந்தனுக்கும், பாதுகாப்பாக இராத்தங்கி இனிதாக உறங்குதற்கு வீடு இன்றியமையாததா யிருத்தல் காண்க. பள்ளி கொள்ள உதவாத அமைப்பு உண்மையான வீடாகாது.

பல வீடுகள் சேர்ந்ததே ஊராதலின், வீட்டுப் பெயர் சினையாகு பெயராக ஊரையுங் குறிக்கும்.

எடுத்துக்காட்டு :

குடி = வீடு, ஊர் (காரைக்குடி, மன்னார்குடி).

இல் = வீடு, ஊர் (அழும்பில், கிடங்கில்).

பள்ளி = வீடு, ஊர் (திருக்காட்டுப்பள்ளி, திருச்சிராப்பள்ளி).

நகர் = வெண்சுதை தீற்றிய காரை வீடு அல்லது மாளிகை, அத்தகைய வீடுள்ள ஊர்.

. பள்ளி, தெ. பல்லிய, பல்லெ, . ஹள்ளி, . பல்லி.

பொதுமக்கள் பணத்திலிருந்து நாலரை யிலக்கம் உருபா செலவிட்டுத் தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியில் (Lexicon), பள்ளி என்னும் தூய பழந்தென்சொல் பல்லி என்னும் வடசொல்லின் திரிபாகக் காட்டப்பட்டிருப்பதும், அதை யெடுத்துக் கூறியும் பெருந்தமிழ்ப் பேராசிரியருள்ளும் இரண் டொருவர் தவிர ஏனையரெல்லாம் பேசா மடந்தையர் போல் மானமின்றி வாளா விருப்பதும், மருட்கைக் குரிய செய்திகளாகும்.

பள்ளி - பாளி - பாழி = 1. மக்கள் துயிலிடம். “பெரும்பாழி சூழ்ந்த விடத்தரவை” (திவ். இயற். 1 20). 2. விலங்கு துயிலிடம் (பிங்.). 3. கோயில். “ஐயன் பாழியில் ஆனை போர்க்குரித்தாம் அன்று” (ஈடு, 1 1 5). 4. முனிவர் உறைவிடம் (பிங்.). 5. இடம். “வானவர்கோன் பாழி” (திவ். இயற். 2 13). 6. மருதநிலத்தூர் (சூடா.). 7. நகரம் (பிங்.) ஒ.நோ.: Gk. polis, city. 8. சிறுகுளம். “பூழி நாட்டார்..... சிறுகுளத்தைப் பாழி என்றும்..... வழங்குப” (தொல். சொல். 400, நச். உரை). ஒ.நோ.: OE., MLG. pol, E. pool. 9. எலிவளை, எலிப்பாழி (உ.வ.). 10. குகை (திவா.).