செயற்கை விளைவை அறிந்துகொண்ட முந்தியல் மாந்தர், பயிர்த்தொழிலைச் செய்தற்கும் தற்காப்பிற்கும் தத்தம் பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் கொட்பேரப்பிள்ளைகளுடனும், கூட்டங்கூட்டமாக ஒவ்வோரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய பின், நிலைத்த விரிவுபட்ட கூட்டுறவு ஏற்பட்டது; நாகரிகம் தோன்றி வளர்ந்தது; கருத்துகள் பல்கின. அவற்றைக் குறிக்கச் சொற்கள் வேண்டியிருந்தன. பழைய எழுவகை யொலிகளினின்றும் படிப்படியாய்ச் சொற்கள் பிறப்பிக்கப்பட்டன. சொற்கள், முறையே, | (1) | அசைநிலை (Monosyllabic Stage), | | (2) | புணர்நிலை (Compounding Stage), | | (3) | பகுசொன்னிலை (Inflexional Stage), | | (4) | கொளுவு நிலை (Agglutinative Stage), |
என்னும் நால்வகை நிலைகளையடைந்து நிறைவடிவுற்றன. கருத்துகள் மேன்மேலும் புதிது புதிதாய்த் தோன்றத் தோன்றச் சொற்களும் ஆக்கப்பட்டுக்கொண்டே வந்ததனால், மொழியானது வளர்ச்சி யடைந்துகொண்டே யிருந்தது. பிற்கால மொழியை நோக்க முற்கால மொழிநிலை குறைபாடுள்ளதேனும், ஒரு குறிப்பிட்ட கால மொழிநிலையைத் தனிப்பட நோக்கும்போது, அது அக்காலத்திற் கேற்ப நிறைவுள்ளதாகவே யிருக்கும். குறிஞ்சிநிலத்தைவிட முல்லைநிலத்திலும், முல்லைநிலத்தை விட மருதநிலத்திலும், உழவு சிறப்பாய்ச் செய்யப்பட்டது. .உழவிற்குத் தக்க ஊர்ப்பெருக்கமும், ஊர்ப்பெருக்கத்திற்குத் தக்க நாகரிகமும், நாகரிகத்திற்குத் தக்க மொழிவளர்ச்சியும், ஏற்பட்டன. குறிஞ்சியினின்று மாந்தர் பிற நிலங்கட்குச் செல்லுமுன்னரே, மொழிக்கு அடிப்படையான சொற்களெல்லாம் தோன்றிவிட்டன. பிற நிலங்களில், வெவ்வேறு பொருள்களையும் வினைகளையும் குறித்தற்கு, வெவ்வேறு சொற்றொகுதிகள் எழுந்தன. பண்டமாற்றினாலும் ஆட்சிவிரி வினாலும் திணைமயக்கம் ஏற்பட்டதனால், நானில அல்லது ஐந்திணைச் சொற்றொகுதிகளுஞ் சேர்ந்து வளமுள்ள ஒரு பெருமொழி தோன்றிற்று. இங்ஙனம் குமரிக்கண்டத்தில் தோன்றிய மொழியே தமிழாகும். |