துங்கம் = உயர்வு. துங்கன் = உயர்ந்தவன். தூங்குதல் = உயர்தல், மிகுதல். தூக்குதல் = உயர்த்துதல், எடுத்தல், எடுத்து நிறுத்தல். தூக்கு - தூக்கம் = உயரம், நிறை, விலையேற்றம். நூங்கு = உயர்வு, பெருமை, மிகுதி. நூங்கர் = தேவர். நூக்கம் = உயரம். புங்கம் = உயர்வு. புங்கவன் = உயர்ந்தவன். புகழ்தல் = உயர்த்துச் சொல்லுதல். புகல் = புகழ். “பொருபுக னல்லேறு” (கலித். 102) புகுதல் = ஏறுதல். புகு - புகவு = மேலேறுகை. “புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்” (பரிபா. 10:14) புகல்வி = விலங்கின் ஆண். ஒ.நோ: ஏறு - ஏற்றை. “புழற்கோட் டாமான் புகல்வியும்” (குறிஞ்சிப். 258) புரம் = உயர்ந்த மனை, அஃதுள்ள நகர், குடிநகர், பதி முதலிய பிற சொற்களும் தனியில்லையும் ஊரையுங் குறித்தல் காண்க. உயர்ந்த கட்டடங்களுள் தலைமையானது கோபுரம். ஒ.நோ: கோநாய், அரசமரம், நாயகத்தூக்கம். புரம் - பரம் = மேல். பரம் - பரன், பரை. பரண் = உயர்ந்த இருக்கை. பரம்- (பரந்து) - பருந்து = உயரத்தில் பறக்கும் பறவை. பரன் = மேலோன், கடவுள். பர - பரவு - பராவு. பரவுதல் = உயர்த்துக் கூறுதல், புகழ்தல். பரம் - வரம் - வரன் = மேலானது. “உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.” (குறள். 24) பரி = உயர்ச்சி (திவா.). வார்தல் = உயர்தல், வார் = உயர்ச்சி, பர - வர - வார். புரவி = மதில் தாண்டும் உயர்ந்த குதிரை. (திருவிளையாடற் புராணம், நரிபரியாக்கிய படலம். 87 - 94). |