“குவவுக்குரை யிருக்கை” (பதிற். 84:20) குல் - கொல் (கொல்லெனல்) = ஒலிக்குறிப்பு. குல் - கல். “கல்லென் பேரூர்” (சிலப். 12:12) கல் - கலி. கலித்தல் = ஒலித்தல். சுல் - சில் (சில்லெனல்) = ஒலிக்குறிப்பு. சில் - சிலம்பு. சிலம்புதல் = ஒலித்தல். சில் - சிலை. சிலைத்தல் = ஒலித்தல். சுல் - சொல் = ஒலி, மொழி. சொல்லுதல் = உரைத்தல். சொல் ஒலி வடிவாயிருத்தலால், ஒலி பற்றிய பல சொற்கள் சொல்லையும் உணர்த்துகின்றன. எ-டு: | அறைதல் | = ஒலித்தல், சொல்லுதல். | | இசைத்தல் | = ஒலித்தல், சொல்லுதல். | | இயம்பல் | = ஒலித்தல், சொல்லுதல். | | கரைதல் | = ஒலித்தல், சொல்லுதல். |
துழனி = ஒலி. தொனித்தல் = ஒலித்தல், சொல்லுதல். தொனுப்புதல் = அலப்புதல். துணதுணத்தல், தொனுதொனுத்தல், தொணதொணத்தல் என்பன, அலப்புதலையும் விடாது பேசுதலையுங் குறிக்கும். நுள் - நள் (நள்ளெனல்) = ஓர் ஒலிக்குறிப்பு. நுள் - (நொள்) - நொடி = ஒலி, சொல். புல் - புலம்பு. புலம்புதல் = ஒலித்தல். ஒருவன் தனியாயிருந்து தன்னொடு தானே பேசுவது ஒலித்தலளவாயிருப்பதால், அது புலம்புதல் எனப்படும். அதனால் புலம்பு என்னும் சொல் தனிமையைக் குறிக்கும். “புலம்பே தனிமை” (தொல். உரி. 33) இனி, தாக்கும் அல்லது தாக்கப்படும் பொருள்களின் திண்மைக்கும் ஒலிக்குந் தன்மைக்கும் ஏற்பப் பல்வேறு வகையான ஓசைகள் பிறத்தலால், அவற்றைக் குறித்தற்கு வெவ்வேறெழுத் தொலிகள் பயன்படுத்தப் பெறும் என்றறிக. |