iv. விரும்பிக் காக்கும் தலைவன் ஒரு பொருளை விரும்புகிறவன் அதைப் போற்றிக் காப்பானா தலின், விரும்பற் கருத்து காத்தற் கருத்தையுந் தழுவும். எ-டு: | பேணுதல் = விரும்புதல், போற்றுதல். “தந்தை தாய்ப் பேண்” என்னும் ஒளவையார் கூற்றை நோக்குக. ஒரு தலைவனுக்கு அவன் கீழ்ப்பட்டவர் மாட்டன்பு இருத்தல் வேண்டுமாதலால், விரும்புதல் குறித்த சில சொற்களினின்று தலைமை குறித்த சொற்கள் தோன்றியுள்ளன. |
நம்புதல் = விரும்புதல். “நம்பும் மேவும் நசையா கும்மே” (தொல். உரி. 31) நம்பு - நம்பன் = தலைவன். நம்பு - நம்பி = தலைவன். நயத்தல் = விரும்புதல். நய - நாயம் - நாயன் = தலைவன். நாயம் - நாயகம் - நாயகன் = தலைவன். வேட்டல் = விரும்புதல். வேள் = தலைவன். வேள் - வேளான் = தலைவன். நம்பு நய என்னும் இரு சொற்களும் ஒரே யடியினின்று திரிந்தவையே. நாயன் = தலைவன், அரசன், கடவுள், தந்தை. “நாயனார் போனநாள் இன்றென்று அகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி.” (சீவக.. 2097, உரை) என்னுமிடத்து, நாயனார் என்பது தந்தையைக் குறித்தது. நாயன் நாய்ச்சிமார் என்னுந் தொடர் தலைவன் தலைவியரைக் குறிக்கும். இறைவனடியாரையும் தலைவரோடொப்பக் கருதும் வழக்க முண்மையால், நாயன் நாயனார் என்னும் பெயர்கள் அடியாரையுங் குறிக்கும். வள்ளுவனார்க்கு நாயனார்ப் பட்டம் வழங்குவது அவரது புலமைத் தலைமைபற்றி யாகும். நாயன் - நாயர் = சேர (மலையாள) நாட்டுப் படைத்தலைவர் வழிவந்த குலத்தார். நாயன் என்பது தண்டநாயன் என்பதன் குறுக்கம். நாயடு நாயுடு என்பன தெலுங்கு வடிவங்கள். நாயனார் - நயினார் = சமணர்க்கும் சில குலத்தார்க்கும் வழங்கி வரும் பட்டப் பெயர். முதலாவது இது தலைமைபற்றி அவ் விரு சாராரின் தலைவர்க்கே வழங்கியது. தந்தையைக் குறிக்கும் நாயனா நயினா என்பவை தெலுங்கு வடிவங்கள். |