“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறி” வதெல்லாம் கண்டறிவே யாயினும், ஐவகை நுகர்ச்சிப் பொருள்களின் வடிவையும் காணுதற் சிறப்புப்பற்றிக் கண்ணின் தொழிலே காட்சி என விதந்து கூறப்படும். ஐம்புலன்களும் பொருள்களொடு பொருந்துவதனாலேயே நுகர்ச்சியும் அறிவும் ஏற்படுகின்றன. (உள்) - அள் - அறி - அறிவு. குள் - கள். கள்ளுதல் = பொருந்துதல். கள் - கரு - கரி = கண்டவன் (சாட்சி). கள் - கண் = காணும் பொறி. கண்ணுதல் = பார்த்தல் (நாமதீப). கண் - காண் - காட்சி = பார்வை, அறிவு. காண் - காணம் = மேற்பார்வை. காண் - காணி. காணித்தல் = மேற்பார்த்தல். கண்காணி - கண்காணம். கண்காணி = மேற்பார்ப்பவன். துல் - துன்று - தோன்று. தோன்றுதல் = கண்ணொடு பொருந்துதல், தெரிதல், உருக்கொளல், உதித்தல், பிறத்தல். புல்லுதல் = பொருந்துதல். புல் - புலம் - புலன் = பொருந்தியறியும் அறிவு. புலம் = அறிவு, அறிவு நூல், இலக்கணம். புலம் - புலமை. புலம் - புலவன். புலனாதல் = அறியப்படுதல். புலப்படுதல் = புலனொடு பொருந்துதல். புலம் - புலர். புலர்தல் = கண்ணுக்குத் தெரிதல், விடிதல். புலர் - புலரி = விடியல். புலர் - பலர் - பலார். பலாரென்று விடிந்தது என்பது வழக்கு. ii. கருதியறிதல் கருதி யறிதலாவது அகக்கண்ணாற் கண்டறிதல். மனம் ஒரு பொருளொடு அல்லது செய்தியொடு பொருந்துதலே கருதலாம். உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்துமுறை, பொருத்தமாகக் கொள்ளும் ஊகம். |