பக்கம் எண் :

29

நிறைமொழி மாந்தர் மறைமொழிக் கருத்து வலிமையொடு கூடியது என்பதை “ஆணையிற் கிளந்த” என்னுந் தொடர் குறிப்பாய் உணர்த்தும். கருத்து வலிமையொடு கூடாவிடத்து ஒரு மொழியும் ஒரு பயனும் உறாது. மந்திரம் வாய்மொழி எனவும் படும். வாய்மையான மொழி அல்லது வாய்க்கும்மொழி வாய்மொழி. திருமூலர் அருளிய திருமந்திரமும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியும், கவுந்தியடிகள் இரு பரத்தரைச் சவித்த மொழிகளும் போல்வன, மந்திரங்களாம். மந்திரத்தைக் காட்டும் மொழியையும் மந்திரம் என்றது ஓர் ஆகுபெயர்.

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”                                          (குறள். 666)

ஆதலால், திண்ணிய வுள்ளத்தின் வழிப்பட்டதே வாய்மொழி என அறிக. மனத்துக்கண் மாசிலனான ஒருவன், ஒருவரை வாழ்விக்கவோ சாவிக்கவோ வாய் திறந்து ஒன்றைச் சொல்ல வேண்டுவதில்லை. உள்ளத்தில் உள்ளினாலும் போதும். கடவுளை வேண்டும் மன்றாட்டு எங்ஙனம் உரையின்றி உள்ளத்திலும் நிகழ முடியுமோ, அங்ஙனமே மந்திரமும் என்க.

“நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த” என்னுந் தொல் காப்பியச் சூத்திரத்திற்குப் பேராசிரியர் உரைத்த உரை வருமாறு:-

“இது மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று.” இதன் பொருள்:- நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் என்றவாறு. அவர் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனா காமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திர மெனப்படும் என்றவாறு.

“அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. ‘தானே’ என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரமென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள. அவை நீக்குதற்குமென உணர்க. அவை:-

“ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”

எனவும்,