பக்கம் எண் :

61

துன்பங்கண்டு அரற்றும்போதும் ஓர் இறும்பூது கண்டு வியக்கும்போதும்; சிறாரும் இளைஞரும் பெற்றோரை விளித்தல் இயல்பு. இதனால், பெற்றோரைக் குறிக்கும் சொற்களினின்று, இரக்கக் குறிப்பிடைச் சொற்களும் வியப்புக் குறிப்பிடைச் சொற்களும் தோன்றியுள்ளன.

பெற்றோர் பெயர்இரக்கக் குறிப்பிடைச் சொல்வியப்புக் குறிப்பிடைச் சொல்
அப்பன்அப்ப, அப்பா,
அப்பப்ப, அப்பப்பா
அப்ப, அப்பா, அப்பப்ப, அப்பப்பா
அச்சன்அச்சோஅச்சோ
அம்மைஅம்மா, அம்மவோ,
அம்மகோ
அம்ம, அம்மா, அம்மம்ம
அன்னைஅன்னோஅன்னோ

இங்ஙனமே, ஐ, ஐயன் என்னும் பெயர்களினின்றும், ஐய, ஐயவோ - ஐயகோ, ஐயே, ஐயையோ முதலிய இரக்கக் குறிப்பிடைச் சொற் களும், ஐ, ஐய, ஐயோ முதலிய வியப்புக் குறிப்பிடைச் சொற்களும்; பிறந்துள்ளன.

சுட்டொலிக் காலத்திற்கு முந்திய குறிப்பொலிக் காலத்தில் தோன்றிய வியப்புணர் வொலிகளுள் ஒன்று ஆய் என நெடின் முதலாகவே தோன்றியிருத்தல் வேண்டும். அது பின்னர் ஆய் - அய் (ஐ) எனக் குறுகியிருக்கலாம். அவ் வுணர்வொலிக் குறுக்கம் வேறு; அள் என்னும் அடிப் பிறந்து தந்தையைக் குறிக்கும் சொல்லினின்று திரிந்து இன்று வழங்கும் ஐ (அய்) என்னும் வியப்பிடைச்சொல் வேறு.

“ஐவியப் பாகும்”                                                (தொல். 868)

தந்தைக்கு அடுத்தவன் தமையன். தம் என்னும் முன்னொட்டுப் பெற்ற ஐயன் என்னும் பெயரே, தமையன் என்பது.

“முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்”                         (பு. வெ. 8: 22)

என்பதில், ஐயர் என்பது தமையன்மாரைக் குறித்தது.

உறவுமுறையல்லாத பெரியோருள், தந்தைக்கு நெருங்கியவன் ஆசிரியன். ஆசிரியர் இல்லறத்தாரும் துறவறத்தாருமாக இரு சாரார்.