முரு - முரி - மூரி = வளைவு. முரிதல் = வளைதல். முள் - முறு - முறை - மிறை = வளைவு. குல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல். iii. வணங்குதல் மக்கள் கடவுளையும், தாழ்ந்தோர் உயர்ந்தோரையும் வணங்கும் போது உடம்பு வளைதலால், வளைதற் கருத்தில் வணக்கக் கருத்துப் பிறந்தது. உறு - இறு - இற - இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வளைதல், வணங்குதல். குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம். குடந்தம் படுதல் = வளைதல், வணங்குதல், தொழுதல். குள் - (மள்) - வள் - (வண்) - வணங்கு - வணக்கு - வணக்கம். வணங்குதல் = வளைதல், தொழுதல். iv. திரும்புதல் ஒரு பொருள் வளையும்போது அது தான் முன்பு புறப்பட்ட இடத்தை அல்லது திசையை நோக்குதலால், வளைதற் கருத்தில் திரும்பற் கருத்துப் பிறந்தது. துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு. திரு - திரி. திரிதல் = திரும்புதல். முள் - முறு - முறி - மறி. மறிதல் - திரும்புதல். முள் - முடு - முடங்கு - மடங்கு. மடங்குதல் = திரும்புதல். மடங்கு - மடங்கல் = இடையிடை திரும்பிப் பார்க்கும், அதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் அரிமா, அதுபோன்ற கூற்றுவன். v. மீள்தல் மீள்தலாவது திரும்பி வருதல். துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு. திரு - திரி. திரிதல் = திரும்புதல். “ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான்” (கம்பரா. அங்கத. 10) |