பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

அது ஆகுபெயராய்ப் புதுமையாய் வரும் விருந்தாளையும் அவருக்கிடும் உணவையும் குறித்தது. விருந்துண்போரில் சிறந்தவர் புதிதாய் வந்தவர் என்பது தமிழர் கருத்து. இதனால், தமிழரின் விருந்தோம்பற் சிறப்பு அறியப்படும்.

12. உண்மையின் இயல்பு

உண்மை என்பது சொல்லைமட்டும் பற்றிய அறமன்று. உள்ளும் புறம்பும் ஒத்திருப்பதே உண்மை. உள்ளம் வாய் மெய் ஆகிய முக்கரணங்களும், ஒருங்கே உண்மையில் ஒத்திருத்தல் வேண்டும். இவ் வியல்பை யறிந்தே, உண்மை வாய்மை மெய்ம்மை என உண்மைக்கு முப்பெயரிட்டனர் முன்னோர். உள்ளத்தைப் பற்றியது உண்மை; வாயைப் பற்றியது வாய்மை; மெய்யைப் பற்றியது மெய்ம்மை.5

உண்மை சொல்லை மட்டும் பற்றியதென்னும் தப்புக் கொள்கையாலேயே, பொல்லாதவர் பொய்யாணையிடுவதும் பிறர் அதை நம்பி ஒப்புக்கொள்வதும் நேர்கின்றன.

உளத்தொடு பொருந்தாது சொல்லொடும் மெய்யொடும் மட்டும் பொருந்துவது ஒருபோதும் உண்மையாகாது. உளத்தொடு பொருந்திய உண்மையுரைப்பவர் திருந்திய வொழுக்க முடைய வராயிருத்தல் திண்ணம் என்னும் கருத்தே,

“ பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
  செய்யாமை செய்யாமை நன்று’’                                      (குறள். 297)

என்ற குறளின் அடிப்படை என்க.

13. உடல் வலியால் தீமை

ஒருவர்க்கு உடல்போன்றே உள்ளமும் வலிமையடைதல் வேண்டும். உள்ள வலிமைக்கு அடிப்படை அறிவே. இதனால், அறிவை ‘உரன்’ என்றார் திருவள்ளுவர். உரன் வலிமை.

“ உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
  வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து’’                                (குறள். 24)

என்பது குறள்.

5.   மெய்ம்மை என்னுஞ் சொல்லை ‘மெய்’ என்னும் உடம்பின் பெயரடிப் பிறந்ததாகக் கொள்ளுதல் “பொய்யான வுடம்மை மெய்யென்பது மங்கல வழக்கு” என, இலக்கண உரையாசிரியர் கூறுவது பொருந்தாது.