பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

இலைக்குள் மறைந்து கிடந்து, சிலர் கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு மட்டும் தோன்றும் காய், இலைமறைகாய்.

ஒருவன் விளாமரத்திலுள்ள குரங்கைக் கல்லாலெறிந்தால், அது அவனைத் திருப்பியெறிதற்கு வேறொன்று மில்லாமையால் விளங்காயாலேயே எறியும். இது, ஏற முடியாத விளாமரத்திலுள்ள காயை வலக்காரமாய்ப் பெறும் வழியாம். இங்ஙனம் குரங்கு எறியும் விளங்காயே குரங்கெறி விளங்காய். குரங்கு தானாக விளங்காயெறியா விட்டாலும், கல்லெறிந்தவனிடம் பழி வாங்குவதற்கு எறிவதுபோல ஆசிரியன் தானாக ஒன்றைச் சொல்லாவிட்டாலும் மாணவர் வலக்காரமாய் வினவும் வினாவிற்கு விடையிறுக்கும்போது தன்னையறியாமலேஅதைச் சொல்ல நேர்ந்துவிடுவது இயல்பு. இதை யறிந்த மாணவர் இம் முறையைக் கையாளுவர்.

14. இருதிணைப் பொதுப்பொருளும் உவமமும்

ஒரு கால்வாயினின்று கிளைக்கால்வாய் வெட்டுதலுக்குக் குறங்கறுத்தல் என்று பெயர். குறங்கு, தொடை. ஓர் ஆறும் அதனின்று பிரியும் கால்வாயும் இருதொடை போன்றன.

பற்றுக்கோடு என்பது, முதலாவது கொடிகள் பற்றிப் படரும் கொள்கொம்பிற்கும், ற தாங்கலுக்கும்பெயர். பற்று - பிடிப்பு. கோடு - கொம்பு.

ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீரவேண்டுவதைக் கட்டாயம் என்பர். கட்டவேண்டிய ஆயம்கட்டாயம். கட்டுதல், செலுத்துதல்; ஆயம், வரி. வரிகட்டுவது பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம். வரிகட்டுவது போன்ற கண்கடிப்பு; கட்டாயம்.

பண்டைக்காலத்தில் தமிழை வளர்த்தற்குப் பாண்டியர் நிறுவிய கழகங்கள் மூன்று; அவை தலைஇடை கடை என்னும் அடைமொழி கொடுத்துக் கூறப்படுவன. அவற்றுள், தலைக்கழகத் திலக்கணமாயிருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழுவிலக்கணமா யிருந்ததினால், தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கே இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வரவேண்டுமாயின், அவரைத் “தாங்கள் அகத்தியமாய் வர வேண்டும்’’ என்றழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.