பக்கம் எண் :

27

வாடை என்பது குடிகளுக்குரிய ஊர்; நத்தம் என்பது பார்ப்பன ரல்லாதார் வாழும் ஊர்; குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர்; குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர்; குடியேற்றம்7 என்பது மக்கள் குடியேறிய ஊர்; கல்லாங்குத்து என்பது கடின நிலத்தூர்; முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; பேட்டை என்பது சந்தை கூடும் ஊர்.

எயில் என்பது மதில் சூழ்ந்தவூர்; புரம் புரி என்பன அரசர் தலைநகர். விண்ணகரம்8 என்பது திருமால் கோயில் உள்ள ஊர்.

ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக்கொண்ட ஊர்கள், அவ்வவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை என்பதை, எவரும் சொல்லாமலே அறிந்து கொள்ளலாம். ஏரி என்று முடியும் பேரைக்கொண்ட ஓரூரில் ஏரியில்லாவிடின், அது ஒரு காலத்திலிருந்து பின்னர்த் தூர்ந்து போனதென்றறிதல் வேண்டும். இங்ஙனமே பிறவும்.

புறம் பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பொருளிழந்து பொதுப் பெயராகவழங்கிவருகின்றன. ஆதலால், இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா.

16. கதை

யாரேனுமொருவர் பேதைத் தன்மையாய்ப் பேசினால், அவரைப் பிறர் ‘கொங்கணவன்’9 என்பது வழக்கம்.

கொங்கணவன் என்னும் பெயரையுடைய முனிவர், தம் தவவலிமையால் ஒரு கொக்கைக் கொன்று வீழ்த்தியபின், மக்களையும் அங்ஙனமே சாவிக்கலாம் என்று கருதி, தமக்கு ஐயமிடக் காலந்தாழ்த்துவந்த வாசுகியம்மையாரை உறுத்து நோக்க, அவ்வம்மையார் “கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?’’ என்று கடிந்தார். அதன்பின், அம் முனிவர் கற்புடை மங்கையரின் பெருமையையுணர்ந்து, அவ் வம்மையாரிடம் மன்னிப்புக் கேட்டுச் சென்றார் என்பது வரலாறு.

7.   'குடியேற்றம்' என்பது இன்று 'குடியாத்தம்' என மருவி வழங்கும்.

8.   விண்டு + நகரம் = விண்ணகரம்; விண்டு - விஷ்ணு நகர், நகரம் - மனை, கோயில.

9.   'கொங்கணவன்' என்பது உலக வழக்கில் 'கொங்கணையன்' என வழங்குகிறது.