குறிப்பதாகும். அது பின்னர் ஆகுபெயராய் ஒரு பெயரால் விளிக்கப்படும் ஆளையும் குறிக்கும். இருவர் மூவர் முதலிய எண்ணடி உயர்திணைப் பெயர்களை இரண்டு பேர் மூன்று பேர் என்னும் வகையிற் சொல்வது உலக வழக்கு. பேர் என்பது பெயர் என்பதன் மரூஉ. இறையான்மா போன்றே உயிரான்மாவும் முதலீறற்ற தென்பதும், நிலைத்திணை (தாவரம்) நீர்வாழ்வன ஊர்வன பறவை விலங்கு மக்கள் தேவர் ஆகிய எழுவகைப் பிறப்புகளை யடையுமென்பதும், மக்கட் பிறப்பில் வீடுபேற்றிற்குச் சமைந்த நிலையில் இறைவனால் (ஆசிரிய வடிவில்) ஆட்கொள்ளப் பெறும் என்பதும், தென்னாட்டுச் சிவநெறிக் கொள்கை. “ ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’’ “ புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ “ நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ “ சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ “ நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ “ புள்ளும் மாவும்4 ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ “ மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ (மரபியல், 27 - 33) என்பன தொல்காப்பியம். இந் நூற்பாக்கள் அறுவகைப் பிறப்பையே எடுத்துக்கூறினும், ஏழாம் பிறப்பாகிய தெய்வப்பிறப்பும் இறுதியதனுள் அடங்கும். 4. ‘மாவும் மாக்களும்’ என்பது பாட வேறுபாடு. |