“மக்கள் தாமே ஆறறி வுயிரே’’ என்று கூறியதோ டமையாது, “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ என்று ஆசிரியர் பிறிதும் இணைத்துக் கூறியதனால், ஆறறிவுள்ள தெய்வப் பிறப்பும் மக்கட் பிறப்போடு சேர்த்துக் கூறப் பெற்றதாகும். உயிர்களை அறிவுபற்றி வகைப்படுத்திக் கூறுவதே ஆசிரியர் நோக்கமாதலின் விண்ணு லகிலுள்ள தேவர்களை விதந்து குறிப்பிட்டிலர். ஆறறிவுயிர் என்னும் பிறப்பளவில் மக்கட்கும் தேவர்க்கும் வேறுபாடின்மை யுணர்க. மேலும், இல்லறம் துறவறம் ஆகிய இருவகை யறத்திலும் சிறந்தோரைத் தெய்வத்தோ டொப்பக்கொள்வது இருவகை வழக்கிலும் காணப்பட்டதாகும். துறவிகளைக் கடவுளர் என்றும் பகவர் என்றும் அடிகள்என்றும் அழைப்பதையும், “ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’’ (குறள். 50) என்று வள்ளுவர் கூறியதையும் நோக்குக. ஆகவே, எழுவகைப் பிறப்பும் தொல்காப்பியனார்க்கு உடம்பா டென்பதும், அறுவகைப் பிறப்பையும் முறையே ஒவ்வோ ரறிவாக ஏற்றிக் கூறுவதால் அவற்றுக்கொரு தொடர்பு குறிப்பது ஆசிரியர் கருத்தென்பதும் பெறப்படும். எழுவகைப் பிறப்பையும் எடுக்கும் ஆன்மாவானது உயிரளவில் ஒன்றாயிருப்பினும் உடம்பளவில் வேறுபடுவதாலும், ஓரறிவுள்ள நிலைத்திணைப் பிறப்பிற்கும் ஓர் உடம்பு வேண்டி யிருப்பதாலும். ஒவ்வொரு பிறப்பையும் ஒரு வேறுபாடு அல்லது வேற்றுமையெனக் கொள்வது சாலப் பொருத்தமாகும். நிலைச்சொல்லான பெயர்ச்சொல் வருஞ்சொல்லின் பொருட் கேற்பத் திரியும் வேறுபாட்டை, வேற்றுமை என்பது தமிழிலக்கணம். தொல்காப்பியர் வேற்றுமையைப் பற்றிக் கூறுமிடத்து, “ வேற்றுமை தாமே ஏழென மொழிப’’ (546) “ விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே’’ (547) “ அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி என்னும் ஈற்ற’’ (548) |