பக்கம் எண் :

5

நட்டவன் தண்ணீர் விடமாட்டானா?” என்று கூறுவதும், மணமக்களை, ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்றழைப்பதும் உலக வழக்கு.

மகனைக் கொம்பன் என்றும், மகளைக் கொம்பு என்றும், இருவரையும் பொதுப்படக் குலக்கொழுந்து என்றும் கூறுவது வழக்கம். பெற்றோர் மரம்போல்வராயின், பிள்ளைகள் கிளைகளும் கொழுந்தும்போல்வர். ஒரு மரத்தின் அடியில் முளைக்கும் முளையைப்போன்று மகனிருத்தலின், அவனுக்குக் கான்முளை என்றும் பெயர்.

பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு குடியை ஒரு மரமாகக் கொள்ளின், அக் குடும்பங்கள் அதன் கிளைகளைப் போன் றிருத்தலால், இனத்திற்குக் கிளையென்றும், இனத்தார்க்குக் கிளைஞர் என்றும்பெயர்.

பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குலத்தொடர்ச்சி கொடியும் மரமும்போல நீண்டும் தொடர்ந்துமிருத்தலின், அதனைக் கொடி என்றும், கொடிவழி என்றும், மரபு என்றும் கூறுவது வழக்கம். வித்தும் வேரும் அடியும்கிளையும் குச்சுங் கொழுந்துமாகத் தொடர்ந்தோங்கும் மரம்போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத்தொடர்ச்சி மரபு1 எனப்பட்டது. தந்தைமகன் வழிமுறையாக அல்லது ஆசிரிய மாணவ வழிமுறையாகத் தொடர்ந்துவரும் வரன்முறையை வாழையடி வாழை முறை யென்பர்.

“வாழையடிவாழையென வந்த திருக்கூட்டம்’’

என்றார் இராமலிங்க அடிகளும்.

இனி, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவரும் திருமணவுறவைக் கால் என்பதும் தொடர்ச்சி பற்றியே. கால் என்பது வாய்க்கால். “பழங்காலைத் தூர்க்காதே, புதுக்காலை வெட்டாதே’’ என்பது பழமொழி.

3. அரசனும் குடிகளும்

ஆயன் ஆக்களைக் காப்பதுபோல அரசன் மக்களைக் காத்தலால், அரசனுக்குக் கோவன் என்று பெயர். கோவன் என்பது

1. தொடர்ந்துவரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழக்காற்றையும் மரபு என்பதுமுண்டு. தொல்காப்பியத்திலுள்ள மரபியல் என்னும் இயற்பெயர் இப்பொருள் பற்றியதே.