New Page 1

8

ஆராய்ச்சி உரை

மொழி என்பன அவை. உரை என்ற பகுதியின் இலக்கணத்தைச் சொல்லுமிடத்தில், அதை நான்காக்குவார். அவற்றில்,

“பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும
         பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்”1

என்று வரும் இருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே.

பண்ணத்தி

    இப்படிப் பண்டையோர் வகுத்த வகைகளைக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற ஒன்றின் இலக்கணத்தைக் கூறுகிறார். அடிவரையறையில்லாத செய்யுட்களைக் கூறிவிட்டு இதைக் கூறுவதனால், இதுவும் அடிவரையறையில்லாதது என்று கொள்ளவேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் நான்குக்குப் பின் சொல்வதனால், இதையும் வாய் மொழியிலக்கிய வகையில் சேர்ப்பதுவே பொருத்தமாக இருக்கும்.

    தொல்காப்பியர் கூறுவதைப் பார்க்கலாம்.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
         பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே”2

என்பது சூத்திரம். இதற்கு, ‘பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு’ என்று பேராசிரியர் உரை எழுதியிருக்கிறார். பின்பு,

        ‘மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும்  பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின்  என்பது.  அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க’

என்று பண்ணத்தியைப் பற்றிய சில இயல்புகளைக் கூறியுள்ளார். அவ்வுரையிலிருந்து பண்ணத்தி என்பது முன்பே சிலவற்றிற்கு வழங்கிய பெயரென்றும், அந்தப் பெயர் ஒப்புமை பற்றி இங்கே சுட்டப் பெறும் இலக்கிய வகைக்கு வந்ததென்றும் தெரிய வருகிறது. ‘மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப’ என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். அது இன்னது என்று திட்டமாகத் தெரியவில்லை.
________________________________________________________

    1. செய்யுளியல், 173.                      2. செய்யுளியல், 180.