பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்13

மன்னன் சொல் விருத்தம்
“வடகரை நாடு காவல்
   வல்லசேப் பிளையான் கேளாய் !
 துடியிடை மாது புத்தூர்
   சோமாசி பட்டர் பெற்ற
 மடமயில் மாது தன்னையுன்
   மகன்சிறை யெடுத்தொளித்ததாக
 வடமொழி மறையோ ரெல்லாம்
   வகையெனக் குரைசெய் தாரே”
 
     வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளையானே, குணசீல மங்கலம் புத்தூர் சோமாசி பட்டர் மகளாகிய ஆரிய மாலையை உன்மகன் காத்தவராயனானவன் சிறையெடுத்துப் போனதாக வடகரை பிறாமணாள் ஆதியந்தமும் நம்மிடம் முறையிட்டார்கள். அப்படி நம் காலத்தில் செய்யலாமோ? சேப்பிளையான் !
சேப்பிளையான் சொல்விருத்தம்
அருமறை புகழ வாழும்
   ஆரியப் பேந்திர மன்னா !
மருமலர்ப் புத்தூர் தன்னில்
   மாலையை எனது மைந்தன்
சிறையெடுத் தொளித்த தாகத்
   தேவரீர் சொல்லக் கேட்டேன்
கருவுடன் எங்கும் தேடிக்
   கட்டியே தருகு வேனே”
 
     வசனம் : ஆகோ கேளுங்கள் அய்யா சாமி ஆரிய மாலையை என்மகன் சிறையெடுத்து ஒளித்ததை யானறியேன். அப்படி உண்டானால் சமூகத்தில் கட்டித் தருகுவேன் அய்யா சாமி.
நடை
நாட்டுப்பாடல்
சேப்பிளையான் கூற்று
ஆரியப்பூ ராசாவே ஆண்டவனே கும்பிடுறேன் !
காரியமாய் கேட்டருளும் என் கர்த்தாவே சொல்லுகிறேன்
 
என்னுடைய காவலென்றால் எமனும் வந்தண்டானே
உன்னுடைய தேசமதில் உத்தமனே ஆரியப்பா.