பக்கம் எண் :

38காத்தவராயன் கதைப்பாடல்

வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன்
பாருலகில் முன்நடந்த பழமை உரைக்கிறேன்
 
துஷ்டருக்கு எத்தனைதான் சொன்னாலும் சொன்னமொழி
அக்ஷணமே பொறுத்தல் ஆவதுண்டோ மன்னவனே
 
வஞ்ச அரவினுக்கு வாய்த்தமிர்தம் தானளித்தால்
நஞ்சை உதவுமல்லாமல் நல்லமிர்தம் தந்திடுமோ
 
தேள்தனைக் கையால் சேர அணைத்தெடுத்தால்
ஆள்தனைக் கொட்டாமல் அமிர்தம் கொடுத்திடுமோ18
 
நெருப்பைக் கனல்பொறியாய் நேரிட்டு ஒதுங்காமல்
விருப்பமுடன் முடிந்தால் வேகாமல் விட்டிடுமோ
 
பாட்டைவைத்19 தானெளிதாய் பார்த்துச் சுழற்றாவிட்டால்
வெட்டாமல் விட்டிடுமோ வேந்தரே கேளமைய்யா
 
துஷ்டருக்கு உரைத்தபுத்தி சிறக்குமோ லோகந்தன்னில்
இஷ்டமாய் சிறையெடுத்தேன் இது ஒருபெரிதோ முன்னால்
 
திட்டமாய் பெரியோர்பெண்ணைத் தேடியே யெடுத்தபேரை
பொட்டெனச் சொல்லுவேனிப்போ புகழுரை செய்குவீரே.
 
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன்
பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன்
 
பார்வதியாள் தானிருக்க பரம சிவனாரும்
ஓர்சடையில் கன்னிதனை ஒளித்து வாழலையோ
 
நலமுடைய லஷ்மியாள் நன்றாய் அருகிருக்க
உலக மளந்ததொரு உத்தமனாம் மாயவனார்
 
தேச மதிலாய் சிறக்கவே கொண்டருளி
சத்திய பாமாவைத் தழுவி யணையலையோ
 
அன்ன மதிலேறும் ஆனதொரு பிர்மாவும்
வர்ணக் கலைமகளை வாக்கிலே வைத்தருளி
 
தானே படைத்துச் சமைந்ததொரு ஊர்வசியை
மானே யெனத்தொடர்ந்து மருவிப் புணரலையோ
 
கந்தனுடன் தெய்வானை கலந்து அருகிருக்க
வந்து குறவருட வள்ளிதனைச் சேரலையோ