பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

1. காவிய உலகம்

காதற் சிலை

நிலைமண்டில ஆசிரியப்பா

தண்மலைச் சாரல் சார்தரும் சிற்றூர்
கண்கவர் பொழில்சூழ் கருமலைக் குறிஞ்சி
எனும்பெயர் கொண்டெழில் இலங்கிய தவ்வுழி
இனமயில் அகவ இருந்ததோர் குன்றம்;

கலைஞன் கோட்டம்

குன்றின் அடியில் சிற்பக் கோட்டம்
ஒன்றினை நிறுவி உலகோர் வியக்க
வாழ்ந்தனன் சிற்பம் வல்லான் ஒருவன்;
போழ்ந்தகற் பாறையிற் புகுத்திய புதுமை
கண்டார் அவனைக் கடவுளே என்பர்;
கற்பனைத் திறனும் கைச்சிற் றுளியும்
பொற்புடன் படைத்த அற்புதப் பொருளெலாம்
தொடாஅது நின்று தொலைவில் காண்போர்
விடாஅது நோக்கி வியப்புற் றவையெலாம்
உயிர்ப்பொரு ளென்றே உரைப்பர்; அவர்தாம்
அயிர்ப்பொரு சிறிதும் அடையார்; அருகில்
தொட்டுப் பயின்றபின் துணிகுவர் சிலையென;
எட்டுத் திசையும் நிகரிலை எனமனம்
விட்டுப் புகழ்வர்; விளைபுகழ் மொழிகள்
கொட்டும் பொருள்கள் குறியாக் கொள்ளான்
கலைவளர் நோக்கம் ஒன்றே கருத்தில்
நிலையாக் கொண்டான் நினையான் பிறிதை;