கலையே அவனாம் அவனே கலையாம் கலைஞன் எனும்பெயர்க் கமைந்தோன் அவனே; கண்ணொடு கண்ணிணை கண்ணில் ஒளியும் கையில் உளியும் எண்ணிற் சிலையும் இளமையிற் பொலிவும் உடலிற் கட்டும் ஒருங்குடன் பெற்றோன் இடமுடைக் கோட்டத் திருந்துழி ஆங்கண் அழகிள நங்கை அவன்முன் நின்றாள்; பழகிய தோழியும் பக்கலில் நின்றனள்; நிமிர்ந்தவன் நோக்கினான் நீள்விழி மீட்கிலன் எதிரெதிர் விழிகள் இமையா திருந்தன; வினாவும் விடையும் பெண்மையின் இயல்பால் பேதை நாணினள்; அண்மையில் நின்ற ஆருயிர்த் தோழி, “எங்கள் தலைவி மங்கையர் திலகம் உங்களை நாடி உவந்திவண் வந்தனள் வந்தவள் தன்னை வைத்தகண் எடாஅது நுந்தம் விழியால் நோக்குதல் முறையோ?” என்றொரு வினாவை எழுப்பிட, எழுந்தவன் ஒன்றிய துயில்கலைந் துணர்ந்தெழு பவன்போல் விழிகளைத் துடைத்து மீண்டுற நோக்கி “எழிலுற வடித்த என்சிலை உயிருடன் எழுந்திவண் வந்ததோ எனநான் மயங்கிக் கொழுந்து நிகருடற் கொடியிடை யாள்தனை உற்று நோக்கினேன் உறுபிழை பொறுப்பீர்! எற்றுக் கிவ்வயின் என்பால் வந்தீர்? பொற்றொடி இவள்யார்? புகலுதி” என்றனன். காரணம் கூறினள் “முழுதுணர் கலைஞ! முன்னிநீ படைத்த பழுதிலாச் சிற்பக் கோட்டம் நிறைதரு |