பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பண்புறும் தமிழர் நாட்டைப்
    பாழ்செய இந்தி வந்து
புண்படச் செய்த போது
    பொங்கியே சினந்து பாயும்
பெண்புலி ஒன்று கண்டோம்;
    பேதையர் கூண்டி லிட்டும்
கண்படை கொள்ள வில்லை
    அப்புலி காண்ப தென்றோ!

மறக்குல மகளே! நாட்டின்
    மானமே பெரிதென் றெண்ணித்
திறத்துடன் அறப்போர் ஆற்றும்
    தீரர்தம் கைவேல் ஆனாய்
புறப்படும் பெண்ப டைக்குப்
    புத்துணர் வூட்டி நிற்கும்
அறப்படைத் தலைவி யானாய்!
    எமக்கெலாம் அன்னை யானாய்

அன்னையே உன்போல் மாதர்
    ஆயிரம் ஆயி ரம்பேர்
பின்னரும் உள்ளார் என்று
    பேசிட வாழ்த்துக் கூறி,
இன்னலும் சிறையும் எங்கட்
    கினிமையாய்த் தோன்ற நெஞ்சில்
மன்னுக நீயே உன்றன்
    மலரடி வாழ்த்து கின்றோம் 6

(மாணவர் மன்றத் தலைவி தருமாம்பாள் மறைந்த பொழுது பாடிய பாடல்.)