பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்235

23
உயர்ந்தவன்

உற்றஎன் தோழன் என்கோ
      உடன்பிறப் பாளன் என்கோ
பெற்றஎன் மகனே என்கோ
      பேணிநன் னூல்கள் என்பாற்
கற்றவன் நீயே என்கோ
      கண்ணினும் சிறந்தாய் எல்லாச்
சுற்றமும் ஆனாய் என்கோ
      தூயனே சக்தி வேலே.

அன்புடன் பண்பு கல்வி
      ஆர்க்குமே பணியும் கொள்கை
முன்பெழுந் துதவும் உள்ளம்
      முனிவிலா தினிய பேசும்
பொன்மனம் அடக்க மெல்லாம்
      பூண்டுளாய் என்ப தாலே
என்மனம் நினக்கே யாக்கி
      இருக்கின்றேன் இனிய நண்பா

மனையென நினக்கு வாய்த்த
      மங்கைநல் லாளும் நீயும்
இனியநன் மக்கள் தாமும்
      என்விழிக் கறுவை செய்த
மனைதனில் உடனிருந்து
      மனமுவந் துதவி செய்த
தனிமனம் யார்க்கு வாய்க்கும்?
      தமிழொடு வாழ்த்து கின்றேன்.