நெஞ்சக் குமுறல் இந்திய நாடு விடுதலை பெற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குடியரசு நாடென உலகுக்கும் உணர்த்தி விட்டோம். சில போர்களும் நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டோம். அறிவியல் துறையில் ஓரளவு முன்னேறி விண்வெளியில் கலம் செலுத்தும் அளவிற்கு உயரிய மதிப்பும் பெற்றுள்ளோம். அடிமை அகன்றது; மக்களாட்சி மலர்ந்தது; மகிழ்ச்சி. ஆனால்..............? நாம் விடுதலை நாட்டில் வாழும் மக்கள் எனத் தக்க வகையில் தகுதி பெற்றுள்ளோமா? பண்பாட்டில். ஒழுக்க நெறியில், பொது வாழ்வில் வளர்ச்சி பெற்றுள்ளோமா? சாதிச்சழக்குகள் ஒழிந்தனவா? சமயப்பூசல்கள் ஓய்ந்தனவா? ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதும், சுரண்டி வாழ்வதும் தொலைந் தனவா? தலைவர்களையே சுட்டுக்கொல்லும் அளவிற்குத்தானே முன்னேறியிருக்கிறோம்! விடுதலைபெறுவதற் காகச் சிந்திய குருதியைவிடப் பெற்ற பின் சிந்தும் குருதிதானே மிகுதியாக ஓடுகிறது. மக்கள் மாக்காளகியிருக்கிறோம்! அடிமைகளாகவே வாழ வேண்டியவர்களுக்கு விடுதலை ஏன்? என்று சலித்துக் கொள்ளும் வகையிற்றானே நாடு நடந்து கொண்டிருக்கிறது! பண்பாட்டிற் சிறந்து விளங்கும் மக்கள் வாழும் நாடுதான் விடுதலையை, மக்களாட்சி முறையை நுகர்ந்து, அதன் பயனைப் பெற்று, இன்புற்று வாழ இயலும். மக்கட்பண்பு வளராத நாட்டில் விடுதலையால். மக்களாட்சியால் யாதுபயன்? அங்கே இன்பமோ அமைதியோ மகிழ்ச்சியோ அரும்புவதுண்டோ? குரங்கின் கையிற் சிக்கிய மாலையாகி எல்லாரும் இந்நாட்டு மன்னராகிக் குடிகளே இல்லாத நாடாகி, இறுதியில் நாடு அம்மன்னர் கையிற் சிக்கிச் சீர்குலைந்து நிற்கும். இது நாடோறும் நாம் நேரிற் கண்டறிந்து வரும் உண்மை. |