பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

10. துன்பத் துடிப்பு

விரல்துடித்தால் யாழ்நரம்பில் இசையைக் கூட்டும்;
      விறலியரின் கால்துடித்தால் நடனங் காட்டும்;
திறல்படைத்த சிற்பியின்கை உளிது டித்தால்
      தேவரையுங் கல்லுக்குள் அடக்கிக் காட்டும்;
அருள்பழுத்த கலைஞன்றன் மனந்து டித்தால்
      அரியகலை பலகாட்டும்; சிந்தித் தாயும்
திறல்படைத்த சிந்தனையார் மனந்து டித்தால்
      சீர்மைமிகும் புத்துலகைப் படைத்துக் காட்டும்.

கற்பனையில் உலவுகவி மனத்து டிப்பால்
      கனவுலகம் உருவாகும்; இல்ல றத்தைக்
கற்கவரும் காதலர்கள் மனத்து டிப்பால்
      கருவுலகம் உருவாகும்; பள்ளி சென்று
கற்பவரின் அளவில்லா மனத்து டிப்பால்
      கலகங்கள் உருவாகும்; ஒழுக்கக் குன்றில்
நிற்பவர்தம் மனத்துடிப்பால் நலங்கள் எல்லாம்
      நிலமெங்கும் உருவாகும் தீமை தேயும்.

துன்பத்தில் நெஞ்சங்கள் துடிப்ப துண்டு
      தொடர்கின்ற இன்பத்தும் துடிப்ப துண்டு
துன்பத்தின் துடிப்பாலே புரட்சி தோன்றும்;
      துடிக்கின்ற இன்பத்தில் மருட்சி தோன்றும்;
துன்புற்று மக்களினம் துடித்தால் எங்கும்
      துவள்கின்ற நெஞ்சத்தில் நெருப்பு மூளும்
மின்பற்றி விளையாடும் வாளும் வேலும்
      மிடைந்திருக்கும் ஆட்சிகளும் எரிந்து வீழும்.