பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 139

எல்லாம் பொதுவென்பான் என்பொருள்கள் மற்றவர்க்கு
அல்ல தனியென்பான் ஆராத பேராசை!
வல்லான் சுரண்டி வளர்வதன்றி மற்றொன்றும்
கல்லான் கருதான் களத்தில் நடிக்கின்றான்.
வால்பிடித்துக் கால்பிடித்து வாழ்வு நடத்துதற்கு
வேல்பிடித்த மைந்தன் விரைவாக முந்துகின்றான்;
தன்னிலையிற் றாழ்ந்தும் தனதுயிரைக் காப்பதற்குப்
பின்னடைய வில்லை பெரும்பேதை ஆகிவிட்டான்;
பண்பாடு மூலையிற்போய் பாயை விரித்துவைத்துக்
கண்பாடு கொள்கின்ற காலம் இதுவன்றோ?
எங்கே உனதுமறை? எங்கே உனது நெறி?
எங்கே உனதிறைவன்? என்றால் விழிக்கின்றான்;
இங்கே புகுந்தமறை இங்கே புகுந்தநெறி
இங்கே புகுந்த இறை என்பவற்றைக் காட்டுகிறான்
அந்தோ தமிழினத்தான் தன்னை யறியாது
நொந்தே கிடக்கின்றான் நோயிற் படுக்கின்றான்;
சொந்தமெது வந்ததெது சொல்ல வகையறியான்
வெந்ததைத் தின்று வெறுமனே சாகின்றான்;
விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு
மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து
வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ?
தாழ்ந்து கெடுதல் தகுமோ?எனவெழுந்து
பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி
மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்;
தாளாண்மை கொண்டு தளராது பாடுபட்ட
வேளாண்மை நெஞ்சர் விதைத்த உணர்வுகளை
நெஞ்சமெனும் நன்செய்யில் நேர்த்தி பெறவிளைத்து
விஞ்சுபயன் கொள்க விழைந்து.

பாரி விழா,
பறம்பு மலை,
27.4.1980