156 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
26. ஏற்றம் பெறுமா இந்தியா? தீண்டுதல் குற்றம்; தெருவிடை நடக்க வேண்டுதல் குற்றம்; விழியாற் பார்ப்பது மிகப்பெருங் குற்றம்; மிதியடி யணிந்து நடப்பது குற்றம்; நாயினுங் கீழா இந்திய நாட்டில் இப்படி ஓரினம் சொந்த நாட்டில்நொந்து தவித்தது; அடிமைப் புழுவெனப் படிமிசக் கிடந்தது; மிடிமையிற் பட்டது வேதனை யுற்றது; சிந்தனை மாந்தர் நொந்தன ராகி இந்த நிலை ஏன்? என்றனர் ஏங்கி “அவரவர் தலைவிதி” “ஆண்டவன் படைப்பிது” “தவறில் சாத்திரம் தந்த நெறி” யென ஒதினர் இறைவன் தூதுவர் என்போர்; “தூதரைத் துரத்து; தொழத்தகும் இறைவன் மேதினி மாந்தரை மேலெனக் கீழெனப் படைத்தனன் ஆகின் உடைத்தெறி அவனை; சாத்திரம் இதுவெனில் ஆத்திரங் கொண்டு போர்த்திறங் காட்டு பொசுக்கு நெருப்பில்; மதவெறி தடையெனில் மதத்தை மாற்” றெனப் புதுநெறி காட்டிப் பொங்கினர் இருவர்; தெற்கில் திராவிடப் பெரியார் ஒருவர் வடக்கில் வாழ்ந்த அம்பேத்கர் ஒருவர்; இருவர் தோன்றி எதிர்த்தன ரேனும் சரிவரச் சமனிலை சார்ந்தில தின்னும்; மாற்றம் வேண்டின் நூற்றுவர் வேண்டும், தூற்றும் மதவெறி சூழின் ஏற்றம் பெறுமோ இந்திய நாடே? 21.12.1988 |