48 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
22. வாகை சூடு பண்பட்ட மொழியொன்று கண்டாய்- அது பழுதாகி எழில்போதல் பாராது நின்றாய் கண்பெற்றுங் குருடாக நின்றால் -பாரில் கைகொட்டிச் சிரியாரோ காளையுனைக் கண்டால்? மொழிகாக்க ஒருநோக்கு வேண்டும்-தமிழ் முன்னேறும் முன்னேறும் முழுதாக யாண்டும் பழியாக்கும் பலநோக்கங் கொண்டால் - கட்சி பார்த்தாலுன் தமிழன்னை பாராளல் உண்டோ? ஒருகோட்டில் நீயிங்கு நின்றால்-போரில் உனைவெல்ல நினைவாரும் உலகெங்கும் இன்றாம் வருவார்க்கு நீயொன்று சொல்வாய்- கையில் வாளுண்டு தோளுண்டு வழிகாண என்பாய் வெறிநோக்கம் குறுநோக்கம் என்பார் - அந்த வீணான சொல்லாலே வீழாதே அன்பா பெருநோக்கம் தமிழ்காத்தல் ஒன்றே- என்று பீடாக நின்றோது பேடில்லை என்றே மொழிகாக்க முனையாத நாடு -பாரில் மூலைமுடுக் கெங்குமுண் டாவென்று தேடு வழிகாட்டி நிற்றல்கண் கூடு - போரில் வாளுக்குந் தோளுக்கும் வாகைதனைச் சூடு அங்கங்கே மொழிகாத்தல் உண்மை - அஃ(து) அவ்வவர்க் கியல்பாக வாய்த்ததோர் தன்மை இங்குள்ள மாந்தர்க்கு மட்டும் - அதை இடித்திடித் தெந்நாளும் சொன்னால்தான் எட்டும். 9.3.1987 |