பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

1. தமிழ் வணக்கம்

முத்தமி ழேஉனை எப்பகை யாகினும்
      முற்றிட முன்வருமேல்
எத்தடை மோதினும் அப்படை யாவையும்
      எற்றிமு ருக்கிடுவேன்
எத்துயர் நேரினும் அத்தொழில் ஆற்றிட
      எப்பொழு தும்தவறேன்
மத்தக யானையைச் செற்றிடும் ஏற்றரி
      வல்லமை தந்தருள்வாய்.

விரித்துவரும் வலையிலெலாம் தப்பி நின்று
      வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே!
குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக்
      கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே
நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி
      நின்றொளிரும் ஏடுடையாய் அம்மா நின்றன்
சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன்
      சிறியன்எனைக் காப்பதுநின் கடமை யாகும்.