பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்9

2. மூன்று தமிழ் தோன்றியது

கலிவெண்பா

நீர்நிறைந்து யாண்டும் நிலமொன்றுங் காணாமல்
பார்மறைந்து வெள்ளம் பரவிநின்ற தோர்காலம்;
அந்தப் புனல்குறைய ஆங்கிருந்த ஓங்குமலை
வந்து தலைகாட்டி வானோக்கி நின்றதைத்தான்
கற்றோன்றி மண்தோன்றாக் காலமெனப் பூவியலைக்
கற்றோர்தம் நூலிற் கணித்தார்கள்; மண்டிணிந்த
ஞாலத்தின் முன்தோன்றும் நீலப் பெருங்கல்லைக்
கோலக் குறிஞ்சியெனக் கூறி மகிழ்ந்தனர்; அவ்
வெற்பிடத்துங் காட்டிடத்தும் வேட்டம் பலபுரிந்து
கற்களிலே தீயெழுப்பிக் காலங் கடத்தியவன்
ஆடை யறியாமல் ஆசை புரியாமல்
வீடுந் தெரியாமல் வீரமட்டுந் தானறிவான்;
ஆதி மனிதனவன் அன்னான் கருத்துரைக்க
ஏதும் அறியாதான் எண்ணம் எடுத்தியம்பப்
பேசும் மொழியறியான் பிள்ளைநிலை யுற்றிருந்தான்;
பேச விழியுண்டு பேணும் முகமுண்டு
நீண்டஇரு கையுண்டு நெஞ்சிற் படுங்கருத்தை
வேண்டும் படிஎடுத்து விண்டுரைத்தான் சைகையினால்;
எண்ணம் பலித்துவிடின், எக்களிப்பு மீதூரின்
நண்ணும் உணர்ச்சியினால் நாடித் துடிப்பேறித்
துள்ளிக் குதித்தெழுந்து தோழனுக்குத் தன்கருத்தை
உள்ளக் கிளர்ச்சிதனை ஓதினான் சைகையினால்;