2. மூன்று தமிழ் தோன்றியது கலிவெண்பா நீர்நிறைந்து யாண்டும் நிலமொன்றுங் காணாமல் பார்மறைந்து வெள்ளம் பரவிநின்ற தோர்காலம்; அந்தப் புனல்குறைய ஆங்கிருந்த ஓங்குமலை வந்து தலைகாட்டி வானோக்கி நின்றதைத்தான் கற்றோன்றி மண்தோன்றாக் காலமெனப் பூவியலைக் கற்றோர்தம் நூலிற் கணித்தார்கள்; மண்டிணிந்த ஞாலத்தின் முன்தோன்றும் நீலப் பெருங்கல்லைக் கோலக் குறிஞ்சியெனக் கூறி மகிழ்ந்தனர்; அவ் வெற்பிடத்துங் காட்டிடத்தும் வேட்டம் பலபுரிந்து கற்களிலே தீயெழுப்பிக் காலங் கடத்தியவன் ஆடை யறியாமல் ஆசை புரியாமல் வீடுந் தெரியாமல் வீரமட்டுந் தானறிவான்; ஆதி மனிதனவன் அன்னான் கருத்துரைக்க ஏதும் அறியாதான் எண்ணம் எடுத்தியம்பப் பேசும் மொழியறியான் பிள்ளைநிலை யுற்றிருந்தான்; பேச விழியுண்டு பேணும் முகமுண்டு நீண்டஇரு கையுண்டு நெஞ்சிற் படுங்கருத்தை வேண்டும் படிஎடுத்து விண்டுரைத்தான் சைகையினால்; எண்ணம் பலித்துவிடின், எக்களிப்பு மீதூரின் நண்ணும் உணர்ச்சியினால் நாடித் துடிப்பேறித் துள்ளிக் குதித்தெழுந்து தோழனுக்குத் தன்கருத்தை உள்ளக் கிளர்ச்சிதனை ஓதினான் சைகையினால்; |