47. வாழ்க முச்சங்கம் அப்பனைத் தாடி யென்றும் அம்மையை மம்மி என்றும் செப்பிடுந் தமிழர் நாட்டிற் செந்தமிழ் உணர்ச்சி நெஞ்சில் எப்படி வேர்விட் டூன்றும்? எப்படித் தழைக்கும்? பூக்கும்? இப்பழி சுமந்தா ராகி இருக்கின்றார் தமிழ ரிங்கே. எச்சங்கம் ஊதினாலும் இருவிழி திறவா ராகிப் பச்சிளம் பிள்ளை போலப் பள்ளிகொண் டுள்ளா ரென்றே இச்செயல் தீர்வான் வேண்டி எழுச்சிகொள் புலிப்போத் தன்னார் முச்சங்கம் ஒன்று கண்டார் முந்துறும் ஆர்வத் தாலே. தோன்றுமுச் சங்கம் வாழ்க தொடங்கியோர் உள்ளம் வாழ்க ஈன்றதாய் மொழியைக் காக்கும் எழுச்சியை வளர்த்து வாழ்க ஆன்றவர் போற்றும் வண்ணம் அரியநற் பணிக ளாற்றி மூன்றெனுந் தமிழைக் காத்து மொய்ம்புடன் வாழ்க நன்றே. (சென்னையிலமைந்த முச்சங்கத்திற்கு வாழ்த்து) |