பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

36
வள்ளுவம் பகைமைக்கு மருந்து

பல்பிணியுங் குடிகொண்ட குமுகா யத்தைப்
       பற்றியுள நோய்நாடி முதலும் நாடி
நல்வகையில் அதுதணிக்கும் வழியும் நாடி
       நலம்வாய்க்க மருந்தளிக்கும் வள்ளு வம்போற்
சொல்வகையில் ஒன்றில்லை; எரியுஞ் செந்தீ
       தோய்வன்ன இன்னாத செயினும் நின்பாற்
புல்லவரும் ஒருவன்பாற் சினவேல் என்று
       புகல்மருந்து பகைமைக்குக் கைம்ம ருந்து.

கொன்றன்ன கொடுமைகளை ஒருவன் செய்தால்
       கொடுஞ்சினமும் பகைமையுந்தான் அவன்மேற் றோன்றும்;
என்றுமிது மாந்தனுளத் தியற்கை யாகும்;
       இப்பிணிதான் தீரஒரு மருந்தும் உண்டோ?
நன்றுண்டு; முன்னரவன் உனக்குச் செய்த
       நலமொன்றை நினைத்துக்கொள்! பகைமை யாவும்
அன்றொழியும் எனவுரைத்த வள்ளு வந்தான்
       அருமருந்து; கூட்டுக்குள் அடை மருந்து.

கொடுமைகளைச் செய்தார்க்குக் கொடுமை செய்தால்
       கொழுந்துவிடும் பகைமைத்தீ; அதனால் என்றும்
கெடுதல்பல பரவிவரும்; அழிவுந் தோன்றும்;
       கேடறுக்கும் வள்ளுவத்தில் அதனை நீக்கி
விடுமருந்து சொலக்கண்டோம்; செய்தார் நாண
       விளைத்துவிடு நன்மைகளை; பகைமை மாறும்;
நெடுகஅது நலமாகும் எனும ருந்து
       நெஞ்சுக்குத் தேன்கலந்து தரும ருந்து.