106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
36 வள்ளுவம் பகைமைக்கு மருந்து பல்பிணியுங் குடிகொண்ட குமுகா யத்தைப் பற்றியுள நோய்நாடி முதலும் நாடி நல்வகையில் அதுதணிக்கும் வழியும் நாடி நலம்வாய்க்க மருந்தளிக்கும் வள்ளு வம்போற் சொல்வகையில் ஒன்றில்லை; எரியுஞ் செந்தீ தோய்வன்ன இன்னாத செயினும் நின்பாற் புல்லவரும் ஒருவன்பாற் சினவேல் என்று புகல்மருந்து பகைமைக்குக் கைம்ம ருந்து. கொன்றன்ன கொடுமைகளை ஒருவன் செய்தால் கொடுஞ்சினமும் பகைமையுந்தான் அவன்மேற் றோன்றும்; என்றுமிது மாந்தனுளத் தியற்கை யாகும்; இப்பிணிதான் தீரஒரு மருந்தும் உண்டோ? நன்றுண்டு; முன்னரவன் உனக்குச் செய்த நலமொன்றை நினைத்துக்கொள்! பகைமை யாவும் அன்றொழியும் எனவுரைத்த வள்ளு வந்தான் அருமருந்து; கூட்டுக்குள் அடை மருந்து. கொடுமைகளைச் செய்தார்க்குக் கொடுமை செய்தால் கொழுந்துவிடும் பகைமைத்தீ; அதனால் என்றும் கெடுதல்பல பரவிவரும்; அழிவுந் தோன்றும்; கேடறுக்கும் வள்ளுவத்தில் அதனை நீக்கி விடுமருந்து சொலக்கண்டோம்; செய்தார் நாண விளைத்துவிடு நன்மைகளை; பகைமை மாறும்; நெடுகஅது நலமாகும் எனும ருந்து நெஞ்சுக்குத் தேன்கலந்து தரும ருந்து. |