பொருவெண்கோட் டானைதனை அடக்கி வந்த புலியனைய உதயணன்பால் இருந்த நல்யாழ்; மருவுங்காட் டானிரைகள் மயங்கி நிற்க வாயூதும் ஆயன்கைக் குழலும் ஆவான். அரசியலில் நடிப்பறியான், ஆனால் நல்ல அரசியலின் நடப்பறிவான்; நீண்ட காலம் பரவுதமிழ் நாடிதனைப் பற்றி நின்ற பழிதீர்ப்பான், பழிதீர்த்துக் கொள்ளமாட்டான்; உரமுடையன் நயம்விஞ்சும் சொல்லே சொல்வான்; ஒருநாளும் நயம்வஞ்சம் பேச மாட்டான்; உருவமதிற் சிறுமையினைப் பெற்ற தன்றி உள்ளமதிற் பெருமையையே பெற்று நின்றான். பகுத்தறிவுப் பெருங்கடலுள் முளைத்து வந்த பகலவனை, அறியாமை இருட்க ணத்தைச் செகுத்தொழிக்கும் பரிதிதனை, துயிலை நீக்கச் சிவந்தெழுந்த சூரியனை, அரசி யல்வான் தகதகக்கப் பண்பொளியைப் பாய்ச்சி எங்கள் தமிழ்செழிக்கக் கிளர்ந்தெழுந்த செஞ்ஞாயிற்றை உகப்புடனே தமிழரினம் மலர்ந்து தோன்ற உதித்தெழுந்த கதிரவனை வாழ்த்து கின்றேன். |