154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
21 தமிழ் காத்த தலைவர் செப்பும் மொழிபதி னெட்டுடையாள் என்றாலும் ஒப்புமனச் சிந்தனை ஒன்றுடையாள் பாரதத்தாய் என்றுரைத்தான் என்பாட்டன்; ஏற்புடைய அக்கருத்தை ஒன்றுபடும் ஆற்றை உணரா வடபுலத்தார் செப்புமொழி ஒன்றென்றார் சிந்தனைகள் நூறாகத் தப்புவழி மேற்கொண்டார்; தக்கார் பலர்கூடிச் ‘செந்தமிழ்க்குத் தீங்கு சிறிது வரஒவ்வோம் இந்திக்குத் தென்னாட்டில் என்றும் இடமில்லை; ஒற்றுமைக்குத் தீமை எருவாக்க எண்ணாதீர் பற்றுமக்குத் தாய்மொழியில் பாரித் திருப்பதுபோல் எங்களுக்கும் தாய்மொழியில் ஈடில்லாப் பற்றுண்டு பொங்கும் மொழியுணர்வைப் புல்லென் றிகழாதீர்’ என்றெல்லாம் கூறி இடித்துரைத்தும் கேளாராய்த் தென்றல் உலவுந் திருநாட்டில் இந்தியினை வன்பில் திணித்தார் வடபுலத்து வாழ்மாந்தர்; அன்போ டுரைத்தும் அவர்செவியில் ஏறவில்லை நம்மை அடிமையென நாடாள்வோர் எண்ணியதால் வெம்மை வழியை விழைந்து திணித்தார்கள்; ‘பாரில் குடியரசுப் பண்பை எடுத்தெடுத்துக் கூறிப் பயனில்லை; கூடார் எனமாறிக் கொண்டதே கொள்கையெனக் கொட்டம் அடிக்கின்றார் கண்டும் பொறுத்திருந்தால் காலம் நமைப் பழிக்கும் |