78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பெட்டகத்தே பெருநிதியம் நிறைந்தி ருந்தும் பேழையினைத் திறந்துணர மாட்டா திங்குத் தட்டெடுத்துத் திரிகின்றார்; தமது செல்வம் தரையகத்துப் புதையலெனக் கிடந்தும் தோண்டி தொட்டெடுத்துத் தாம்நுகர்ந்து, பிறருக் கீந்து தோளுயர்த்தி வாழாமல் மற்றோர் பின்னே கெட்டலைந்து திரிகின்றார்; இனிமேல் அந்தக் கீழ்மையெலாம் போயொழியும் குறள் உணர்ந்தால் நல்வாழ்வை அடைவதற்கு விழையும் மாந்தர் நடத்திவரும் பயணத்தில் தொடர்ந்து செல்லப் பல்வேறு வழியுண்டு; சான்றோர் செல்லும் பண்பட்ட ஓர்வழியுண் டிடப்பு றத்தே செல்வாரும் அதைவிடுத்து வலப்பு றத்தே செல்வாரும் காட்டுகிற வழிகள் உண்டு; பொல்லாத குறுக்குவழி ஒன்றும் உண்டு; பொய்யான இருட்டுவழி ஒன்றும் உண்டு. காரிருளில் வழிநடக்க விழைதல் வேண்டா; கதிரவனார் காட்டுகிற வழியே செல்க; பேரிருளிற் கொண்டுய்க்கும் வழிகள் வேண்டா; பெரும்புலவன் வள்ளுவன்சொல் வழியே செல்க; ஈரமிலாச் சுடுமணலில் செல்ல வேண்டா; இருபுறமும் பொழில்சூழும் வழியே செல்க; கூரறிவுக் கண்ணுடையார் விழியை மூடிக் குழிவீழப் பார்ப்பாரோ? கொடுமை யன்றோ? குறள் விழா, காரைக்குடி 25.1.1976 |