பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

ஓதுங் கழகமென ஒப்பிட் டுரைத்தார்கள்;
கொண்ட மனைக்கிழத்தி கூடும் அடிமைஎனக்
கண்டபடி பேசியொரு கட்டுக் கடங்காமல்
ஆங்காங்கே சுற்றி அலையும் மனத்தோடு
தீங்குக்கே சென்று திரிகின்ற காளையரும்,
தற்கொண்டான் சொல்லுமொழி தாண்டி நடப்பதுதான்
முற்கொண்ட கொள்கைஎன முற்போக்குக் காட்டிஅவன்
கூறாமற் காவியுடை கொள்ளும் படியாக
மாறாக வேநடக்கும் மங்கை வடிவினரும்,
பள்ளிக்குச் செல்லாமற் பாடம் பயிலாமற்
சொல்லுக் கடங்காமற் சுற்றித் திரிபவராய்ச்
செய்யாத செய்கைஎலாஞ் செய்தே மகிழ்பவராய்ப்
பொய்யாக என்றும் புனைவதுவே தந்தொழிலாய்ப்
பெற்றவர்தம் நெஞ்சம் பெருந்துயராற் புண்ணாகக்
குற்றங்கள் செய்வதையே கொண்டொழுகும் பிள்ளைகளும்
கூட்டாட்சி செய்யுங் குடும்பத்தைக் காணுங்காற்
காட்டாட்சி செய்யுங் கடுவிலங்குக் கூட்டங்கள்
சார்ந்துரையும் கண்காட்சிச் சாலைஎனச் சொல்வதன்றித்
தேர்ந்துணர்ந்து வேறுவமை செப்ப இடமில்லை;
ஆணுக்குப் பெண்ணடிமை அல்லளெனுங் கொள்கைதனைப்
பேணிச் சமத்துவமே பெற்றொளிரும் இல்லறந்தான்
இன்பம் உடைத்தாகி ஏற்றம் படைத்தொளிரும்;
அன்பின் அடிப்படையில் ஆக்குவதே இல்வாழ்க்கை;
பெற்றெடுத்த தாய்தந்தை பேர்காக்கும் மைந்தர்களைப்
பெற்ற குடும்பந்தான் பேறுபெற்ற நற்குடும்பம்;
கொண்டான் அறிவுநிலை கூடிவருஞ் செல்வநிலை
கண்டே தகநடக்கும் காரிகையே நன்மனையாம்;
நெஞ்சக் குறிப்புணர்ந்து நேரம் அறிந்துமனச்