பக்கம் எண் :

96கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அப்பெரியன் படைத்தளித்த உலக மெங்கும்
       அலைந்தபினும் ஓருருவுங் காணவில்லை

மாந்தனிவன் கற்பனையில் வடித்து வைத்த
       மாறுபடு சிலைகளினால் பகைமை கொண்டு
தாந்தமது கடவுளெனச் சண்டையிட்டுத்
       தந்நலத்தை நினைவாரை அங்குக் காணேன்
காந்துகிற வெகுளிஅவா அழுக்கா றற்றுக்
       கனிந்துவரும் மனத்துக்கண் மாச கற்றி
ஏந்துகிற தொழிலனைத்தும் பிறருக் காக்கும்
       இறையுணர்வில் மிக்காரை அங்குக் கண்டேன்.

வாலறிவன், எண்குணத்தான், மலரின் மீது
       வாழுபவன், ஐந்தவித்தான், பகவன், தன்னைப்
போலொருவர் இல்லாதான், அறத்தின் ஆழி,
       பொதுமையுளன், சாதியிலா அந்த ணன்முப்
பாலுலக இறைவனிவன் உருவ மில்லான்
       பரிந்துருகும் உணர்வுக்குள் வாழ்வான் என்று
நூலறிவன் உணர்ந்துரைத்த தன்மை கண்டேன்
       நூறுருவம் கடவுளுக்குக் காண வில்லை.

ஆனைமுகம் ஆறுமுகம் அங்கே யில்லை
       ஐந்துமுகம் நான்குமுகம் அங்கே யில்லை.
ஏனைமுகத் தெவ்வுருவும் காண வில்லை
       இறைவனிவன் எனக்காட்டும் சிலைக ளில்லை
கூனையுறு பிறையில்லை தொப்பி யில்லை
       குணக்குன்றை அறைந்தெடுத்த சிலுவை யில்லை
தானைகொளும் கொலைக்கருவி ஒன்று மில்லை
       தனியுலகம் அவ்வுலகம் என்றேன்.

21.1.1979 திருக்குறள் பேரவை, நாமக்கல்