266 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 4 மன்னவன் மொழியால் மனமிகப் புலந்து பன்னரும் வேழன் படர்ந்தனன் பிரிந்தே. ஆட்டாளுந் திறமில்லான் மதியு மில்லான் அரியணையில் அமர்தகவு மில்லா னேனும் நாட்டாண்மை பெற்றிருந்தான் மதலைக் கோமான்; நடத்தையெலாம் பெயருக்குப் பொருந்தி நிற்கும்; காட்டாளி வலிமைக்குக் காட்டாய் நின்று கருதலரை வெருவுறுத்தும் மாவே ழற்குக் கூட்டாளி எனவிருப்பான் ஒருகால்; பின்னர்க் குணமாறிப் பகையாளி போல நிற்பான்.13 கூடுவதும் மாறுவதுந் தொழிலாக் கொண்ட கொற்றவன்பாற் படைத்தலைவன் சினந்து தன்னூர்க் கோடுவதும் சான்றோர்கள் சந்து செய்ய உளமிரங்கி மீளுவதும் வழக்க மாகும்; ஏடுவிரி மலர்த்தொடையல் மார்பின் மன்னன் ‘என்பிழைக்கு வருந்துவல்யான்’ என்று ரைக்கும்; நீடுபுகழ்ப் பெருவீரன் நாட்டின் காதல் நெடிதோங்கி நின்றமையாற் குறைபொ றுக்கும்.14 வருபொருளை ஆய்ந்துணரா மன்னன் ஓர்நாள் வாய்காவா துரைத்தமையாற் பிணங்கி வேழன் “ஒருபொழுதும் ஈங்கினிநான் உறைதல் வேண்டேன்; ஒன்னார்தம் படைநாப்பண் சிக்குங் காலம் வருபொழுது தன்மடமைக் கிரங்கி வேந்தன் வாய்விட்டுப் புலம்புவதைக் காண்பேன்” என்று தரியலர்க்குக் கூற்றாவோன் பரிமா வேறித் தனிமையொடு கடிநகரின் நீங்கிச் சென்றான்.15
ஆட்டாளும் திறம் - நிருவகிக்கும் ஆற்றல்.ஆளி- யாளி என்னும் விலங்கு, காட்டு - எடுத்துக்காட்டு. கருதலர் - பகைவர். சந்து - சமாதானம். தொடையல் - மாலை. |