பக்கம் எண் :

வீரகாவியம்269

இயல் - 6

மாவேழன் ஏறிவந்த பரிமா தன்னை
வயந்தநகர்ப் பெருவீரர் கவர்ந்து சென்றார்.

வயந்தநகர்ப் பெருவீரர் சிலர்தாம் கூடி
      மலைச்சரிவின் நெறியிடையே வருவோர் ஆண்டு
வயங்கெழுமும் ஒருபரிமான் கலனை யின்றி
      வாய்பற்றுங் கடிவாளக் கட்டு மின்றி
நயந்துபசும் புன்மேய்ந்து திரியக் கண்டார்;
      நல்லியல்சேர் இவுளியதன் தோற்றங் கண்டு
மயங்கினராய்க் கவர்ந்துசெலக் கயிறு வீசி
      மடக்கினர்அம் மாமடங்கல் மடங்க வில்லை.19

திடங்காணும் அம்மறவர் திரண்டு நின்று
      திறமுழுதும் பயன்படுத்தி முயன்றா ரேனும்
அடங்காது தப்பியது வேழன் பாய்மா;
      ஆசைமனம் அடங்காமல் எழுந்து விட்டால்
படும்பாடு படுவரன்றி விட்டார் யாரே?
      பாய்புரவி பற்றுதற்கே முனைந்து நின்றார்;
கடன்காரன் இரக்கமிலார் நடுவில் நின்று
      கலங்குதல்போல் அப்பரிமான் கலங்கக் கண்டார். 20

சுருக்கிட்டு வலித்தார்கள்; கனன்று சீறித்
      துள்ளுபரி கனைத்தமையால் வீரர் அஞ்சி
வெருக்கிட்டு விரைந்தார்கள்; பதுங்கி நின்று
      வெற்றிகொள வஞ்சனையாற் சூழ்ந்து வந்தார்;
‘செருக்குற்ற புரவிதனை அடக்க லின்றித்
      திரும்புகிலோம்’ எனவுரைத்துக் கயிறு வீசிப்
பெருங்குற்ற தோள்வலியாற் பிணித்தி ழுத்தார்;
      பெரும்பொழுது போராடிக் களைத்த தாங்கே21


வயம் - வெற்றி, கலனை - சேணம். இவுளி - குதிரை.
மாமடங்கல் - சிங்கம் போன்ற குதிரை.