பக்கம் எண் :

வீரகாவியம்281

என்றுபல நினைந்திரங்கி உழலும் வீரன்,
      ஏந்திழையின் கருமேகச் சுருளின் கூந்தல்
ஒன்றுமலர் ஒன்றங்கு நிலத்திற் கண்டான்;
      ஓடோடி உவந்ததனை எடுத்து மோந்து,
வென்றகன்ற எழிலணங்கின் நினைவே விஞ்சி,
      விழிமூடிக் கற்பனையில் மிதந்து சென்றான்;
துன்றமரின் புறப்பொருளே வாழ்வாக் கொண்டோன்
      துறைசெறிந்த அகப்பொருளின் வாயில் கண்டான்44

காதலெனும் அகம்புகுவோர் இமைகள் என்னும்
      கதவுகளை மூடாராய் இமையா நாட்டம்
பூதலமேற் பெற்றிடுவர்; இரவில் கட்டிற்
      புழுவாகப் புரண்டிடுவர்; வெய்து யிர்ப்பர்;
சாதலினுங் கொடுந்துயரில் உழல்வர்; ஈது
      தண்கடல்சூழ் ஞாலத்தின் இயற்கை யன்றோ?
வேதனையில் உழல்வீரன் உறக்க மின்றி
      வெய்துயிர்த்துப் புரண்டிருந்தான் பஞ்சின் சேக்கை45

சாதலுக்குத் துணைபோகும் சமரே கண்டோன்
      காதலுக்குத் துணையாகும் உயிரைக் கண்டான்;
வீதலுக்குத் துணைபோகும் வேலே கண்டோன்
      விழைவுக்குத் துணையாகும் விழியைக் கண்டான்;
வேதனைக்குத் துணைபோகும் களமே கண்டோன்
      விண்வெளிக்குத் துணையாகும் நிலவைக் கண்டான்;
காதினிக்கப் போர்முரசின் ஒலியே கேட்டோன்
      கடுந்தனிமைப் பெருமூச்சின் ஒலியைக் கேட்டான்.46

குறையிரவும் சிறிதேனும் நகர்த லின்றிக்
      குடியிங்குக் கொண்டதென உணர்வு கொண்டான்;
நிறைமதியின் தண்கதிர்கள் பகைவர் வீசும்
      நெடுவேல்க ளெனப்பாயத் தளர்ச்சி கொண்டான்;
விரைமலரின் இதழ்களெலாம் உடலு றுத்தி
      வெப்புறுத்தித் துயர்ப்படுத்த வெறுப்புங் கொண்டான்;
அறைமதில்கள் சிறைமதில்போல் விளங்கக் கண்டான்;
      அரும்பிவரும் காதலெனும் நோயில் வீழ்ந்தான்.47


ஒன்றும்மலர் - பொருந்திய மலர். விஞ்சி - மிகுந்து துன்றுஅமர் - நெருங்கியபோர். புறப்பொருள் - வீரம் துறை - பலவகைத்துறைகள் பொருந்திய. அகப்பொருள் - காதல். நாட்டம் - விழி. சேக்கை - படுக்கை. சமர் - போர். வீதல் - இறப்பு.