பக்கம் எண் :

280கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 13

விழிவேலால் தாக்குண்ட வேழன் ஆங்கே
விளம்பரிய காதலெனும் நோயில் வீழ்ந்தான்.

விழிக்கடையால் அவன்விழியைத் தாக்கி, நெஞ்சில்
      வேதனையை உருவாக்கி நின்ற பாவை,
விழித்திமையா முனம்மறைந்தாள்; மறைந்தா ளேனும்
      வீரன்றன் மனத்தகத்து நிலைத்து நின்றாள்;
வழிக்கதவந் திறந்தகல்வாள் காற்சி லம்பும்
      வளையொலியும் இருசெவிவிட் டகல வில்லை;
பழச்சுளையின் செவ்விதழில் தவழ்ந்த மூரல்
      பார்வையைவிட் டணுவளவும் மறைய வில்லை.41

கற்பனையில் அவையெல்லாம் மீண்டும் மீண்டும்
      காட்சிதரக் கனிந்துருகிப் புலம்பும் வீரன்,
‘பொற்பதுமை இவள்தானோ? வடிவ மென்ன
      பூங்கொடியோ? முழுமதியோ இவள்மு கந்தான்?
முற்படுமவ் விளையமகள் என்னை வென்றாள்!
      முழுவலியும் இழந்திங்குத் தளர்ந்து விட்டேன்;
பற்பலபோர் வென்றிருந்தும் இவ் ணங்கின்
      பார்வைக்கு மனமுடைந்து தோற்று விட்டேன்!42

புள்ளுறங்கும் நள்ளிரவில் யாரு மிங்குப்
      புகுதரிய தனியறையில், அச்ச மின்றிக்
கள்ளருந்தித் துயில்வேன்முன் வந்து நின்ற
      காரிகையார்? எப்பொருட்டால் இங்கு வந்தாள்?
உள்ளிருந்து புறத்தகல்வாள் என்றன் நெஞ்சை
      உடன்கொண்டு நீங்கினளே! கொவ்வைச் செவ்வாய்
வெள்ளெயிற்றின் ஒளிசிறிதே இதழில் மின்ன
      விரியாமல் விரித்துநகை செய்து சென்றாள்!’43


மூரல் - புன்னகை. வெள்எயிறு - வெள்ளியபற்கள்