இயல் - 15 மாவேழன் உற்றபெருஞ் சோர்வு கண்டு வயத்தரசன் நற்றுணையாய்த் தேற்றி நின்றான். நெடும்புலத்தைச் சூழ்ந்திருந்த கங்குற் போது நீங்கினுமவ் வெவ்வேலான் நெஞ்சந் தன்னைத் தொடும்பருவ உணர்ச்சியது விலக வில்லை; துயர்ப்படுத்தி இரவெல்லாம் கதிர்கள் வீசிச் சுடும்நிலவு வானத்தின் அகன்ற போதும் துயிலறையில் மயிலனையாள் வந்து தோன்றிக் கொடுந்துயருள் அவன்மூழ்கக் காட்டிச் சென்ற கோலமுகம் மனத்தினின்றும் அகல வில்லை.50 போராடிப் போராடிப் புறமே கண்டோன் புதியதொரு போர்க்களத்தை அகத்தே கண்டு, போராடிக் களைத்துவிட்டான்; ஆற்ற லெல்லாம் போய்மடியத் தனித்திருந்தான்; பின்னர்க் காலை நீராடிக் கடன்முடித்துத் திருவோ லக்கம் நிகழரங்கம் சென்றிருந்தான்; அரச னோடும் சீராடிப் பயிலவரும் செல்வ ரோடும் சிரிப்போடு சொல்லாடி மகிழ வில்லை.51 முகஞ்சுருங்கி ஒளியின்றிப் பார்வை தன்னில் முனைப்பின்றி யிருப்போனை வேந்தன் நோக்கி, அகங்கனிந்து ‘விருந்தயர்ந்த வேளை தன்னில் அன்ப!நினை வருத்துகுறை நிகழ்ந்த தோ’என் றிகலுடையான் றனைவினவ, ‘இல்லை யில்லை எள்ளளவு குறையொன்றும் நிகழ வில்லை, புகலரிய நிறைகண்டேன்’ எனந கைத்துப் புகன்றாலும் அந்நகைப்பில் உயிரே யில்லை.52
கங்குல் - இரவு, திருவோலக்கம்- அரசவை |