பக்கம் எண் :

ஊன்றுகோல்103

இழந்த ஊக்க எழில்நா டெனதாம்;
ஒல்காச் செங்கோல் ஓச்சுங் காலை
தொல்காப் பியப்பயிர் தழைத்துத் தோன்றும்’
எனஒரு மடலில் எழுதினர் மணிக்கு;
துயர்தருந் துரியன் உயிரது தொலையக் 55
கதிர்மணிக் கண்ணன் காட்டினர் வழியே.

பழமைக்கும் புதுமைக்கும் பால மிட்டுப்
       பகுத்தறிவாற் சமயத்தை நோக்கு கின்றார்;
கிழமைக்கு மனந்தருவார்; மொழிப்போர் என்றால்
       கிளர்ச்சிக்கும் இடந்தருவார்; உள்ளம் ஒன்றித்
தொழுகைக்குக் கடவுளிடம் தமிழே வேண்டித்
       தொண்டுசெயும் மறுமலர்ச்சிப் புதுமை கொண்டார்;
எளிமைக்கோர் இலக்கியமாய் மக்கள் தொண்டிற்
       கிலக்கணமாய் வளர்குன்றக் குடியில் வாழ்வார். 1

திருமடத்திற் குள்ளிருந்து துறக்கம் என்று
       செப்புகிற உலகுக்கு வழிகாட் டாது
பெருமடமைக் காட்பட்டுக் கல்வி யின்றிப்
       பிரிவுதருஞ் சாதிசொலித் தாழ்ந்து கெட்டுத்
திரிபவர்க்கு வையத்துள் வழிகள் காட்டத்
       தீண்டாமைப் பிணியகற்ற வெளியில் வந்த
அருள்மனத்தர் நமதுளத்தர் அடிகள் தம்மை
       அகங்குளிரக் கேளிரென ஏற்றுக் கொண்டார். 2

அமிழ்தனைய தமிழ்மொழியும் அதனோ டொப்ப
       அரனடியும் நினைந்துருகும் அடிகள் தம்மைத்
தமிழரறி திருக்குன்றக் குடியில் வாழும்
       தவமுனியைக் கண்டுவந்து வணங்க எண்ணித்
தமிழ்மொழியும் சிவநெறியும் தழைத்து வாழத்
       தமதுளத்தில் அசைவில்லா உறுதி பூண்ட
தமிழ்மணியாம் பண்டிதமா மணியார் ஓர்நாள்
       தண்டூன்றித் திருமடத்துட் புகுந்தி ருந்தார். 3